மார்க் போடும் மக்கள்.. தீயா வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள்.. கலக்கும் 5T.. கவனிக்கனும் தமிழக அரசு
புவனேஸ்வர்: ஒழுங்காக வேலை பார்க்கலைன்னு மக்கள் சொல்றாங்களா.. உடனே அதிகாரிகள் மீது ஆக்ஷன்தான். முதலில் சஸ்பெண்ட், விசாரித்து பார்த்து குற்றம் நடந்தது உண்மை என தெரிஞ்சா, அடுத்து, டிஸ்மிஸ்தான்..
இது ஏதோ ஷங்கர் இயக்கத்திலோ, அல்லது, தெலுங்கு மொழியிலோ வெளியாகப் போகும் திரைப்படத்தின் கதைக் கரு கிடையாது. அமெரிக்கா, ஐரோப்பா பிராந்தியத்தின் ஏதோ ஒரு மாகாணத்தை பற்றிய செய்தியும் கிடையாது. நமது தாய்த் திரு நாட்டின் ஒடிசா மாநிலத்தில்தான் இப்படி ஒரு, அசத்தல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார், அம்மாநில முதல்வர், நவீன் பட்நாயக்.
'5T' இந்த வார்த்தை, ஒடிசாவிலுள்ள அத்தனை அரசு அதிகாரிகளுக்கும் தூக்கத்தில் கூட சிம்ம சொப்பனமாக வந்து துரத்துகிறது. ஒரு அரசு ஊழியருக்கான 5 அத்தியாவசிய குணாதிசியம்தான், இந்த '5T'.
குழுவாக இணைந்து பணியாற்றுதல் (team work), தொழில்நுட்பம் (technology), வெளிப்படைத்தன்மை (transparency), மாற்றம் (transformation) மற்றும் காலக்கெடு (time limit) ஆகிய 5 ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தை எடுத்துப் போட்டு உருவான ஆக்ஷன் பிளான்தான், '5T'.
மேலே குறிப்பிட்ட, விஷயங்களை அதிகாரிகள் கடைபிடித்து, எப்படி வேலை செய்கிறார்கள், என்ற கருத்து பொது மக்களிடம் கேட்கப்படும். மக்கள் தங்கள் அதிருப்தியைச் சொன்னால், அந்த அதிகாரி மீது நடவடிக்கை பாயும். ஒருவேளை, அந்த ஆபீசர் ரொம்ப நல்லவருங்க, சூப்பரா வேலை பார்ப்பார் என கூறிவிட்டால், அந்த அதிகாரிக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
இப்படி ஒரு அசத்தல் திட்டத்திற்கான, பொறுப்பாளராக முதல்வரின் வலது கரம் என்று வர்ணிக்கப்படும், நவீன் பட்நாயக்கின், தனிப்பட்ட செயலாளர், கார்த்திக்கேயன் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சொந்த மாநிலம் தமிழகம். 2000மாவது ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான பாண்டியன் கார்த்திகேயனின் திறமையான பணியால் கவரப்பட்டு, நவீன் பட்நாயக், கடந்த 2011ம் ஆண்டு முதல், தொடர்ந்து தனது தனிப்பட்ட செயலாளராக பணியமர்த்தியுள்ளார். எதிர்க்கட்சிகளால், சூப்பர் சிஎம் என்று சொல்லும் அளவுக்கு, கார்த்திகேயன் பாண்டியன், நவீன் பட்நாயக்கிற்கு முக்கியமானவர். அவரை இந்த திட்டத்தின் பொறுப்பாளராக நியமித்துள்ளார் என்றால் கேட்கவா செய்ய வேண்டும்.
'5T' திட்டத்தின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளை முதல்வரே நேரடியாக கண்காணிக்கிறார். எனவே, எந்த தவறும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார். பெரும்பாலான புகார்கள், காவல்துறை மற்றும், அரசு மருத்துவர்கள் தொடர்பானதாக இருக்கிறதாம். ஆனால், பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்கிறது. கார்த்திகேயன் பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் குழு அவ்வப்போது, பல்வேறு ஊர்களுக்கும் சென்று, மக்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டு, அவர்கள் புகார்கள் அடிப்படையில், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.
'5T' வந்தாலும் வந்தது, மக்களை பார்த்தால், அதிகாரிகள் மட்டையாக வளைகிறார்களாம். "வாங்க சார்.. உட்காருங்க சார்.. காபி சாப்பிடுறீங்களா.. என போலீஸ் அதிகாரி தன்னிடம் பவ்யமா பேசியதை பார்த்து, உடம்பை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்" என்று சிலாகிக்கிறார் ஒரு முதியவர். பொதுமக்கள் எங்கே.., தங்கள் மீது புகார் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் அரசு அதிகாரிகளுக்கு வந்துள்ளதன் அறிகுறிகள்தான் இது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், '5T' வெற்றிகரமாக ஒடிசாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை, தமிழகத்திற்கும் அரசு கொண்டு வந்தால் என்ன?
இன்னும் ஒராண்டுதான் சட்டசபை தேர்தலுக்கு கால அவகாசம் உள்ள நிலையில், இப்படி ஒரு அசத்தல் திட்டத்தை கொண்டு வந்து 'முதல்வன்' அர்ஜுன் பாணியில், நமது முதல்வரும் சாட்டையை சுழற்றினால் எப்படி இருக்கும்?
கண்டிப்பாக, ஒடிசாவிடமிருந்து தமிழகம் இந்த விஷயத்தில் பாடம் கற்க வேண்டும். கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்கள் பரவும் இந்த காலகட்டத்தில், இப்படியான ஒரு திட்டத்தை கொண்டுவந்து, சகாயம் மாதிரியான எத்தனை நேர்மையான அதிகாரிகளில் ஒருவரை வைத்து, இதை கண்காணிக்கச் செய்யலாம். அரசு இயந்திரம், அமோக வேகத்தில் செயல்பட அது ஒரு நல்ல முன் முயற்சியாக மாறும். அரசுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். பரிசீலிக்குமா, தமிழக அரசு?