ராஜஸ்தானில் உருவாகும் 3வது அணி... பாஜக, காங்கிரஸ்க்கு பாதிப்பா?
டெல்லி : ராஜஸ்தானில் உருவாகி வரும் 3வது அணியால் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. 3வது அணியினரிடையே ஒற்றுமையின்றி பல குழுக்களாக அவை சிதைந்து கிடப்பதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. எனவே தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே தான் மோதல் என்ற சூழ்நிலையே நிலவுகிறது.
ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகிறது. இதே போன்று விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் இருந்தே தங்களது சக்தியை நிரூபிக்க வேண்டும், பாஜகவின் மாநில ஆட்சிகளின் பட்டியலில் இருந்து ராஜஸ்தானை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை விறுவிறுப்புடன் செய்து வருகிறது.
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக தவிர 3வது அணியும் களத்தில் உள்ளது. இடது சாரி, சமாஜ்வாதி கட்சி, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஜனநாயக அணியை உருவாக்கியுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, கன்ஷியான் திவாரியின் பாரத் வாஹினி கட்சி, ஜமிதாரா கட்சி, சுயேச்சை எம்எல்ஏ ஹனுமன் பெனிவாலின் ராஷ்ட்ரிய சோல்தந்திரிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஆனால் இந்த கட்சிகள் தனித்தே தேர்தல் களத்தில் உள்ளன.
ஜனநாயக அணி
லோக்தந்திரிக் மோர்ச்சாவில் ( ஜனநாயக அணி) இருக்கும் கட்சிகளைத் தவிர கன்ஷியான் திவாரி தலைமையிலான பாரத் வாஹினி கட்சியும் ஹனுமன் பெனிவாசின் ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சியும் ஒன்றாக தேர்தலை சந்திப்பதற்காக கைகோர்த்துள்ளன. நேற்றைய தினம் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனினும் பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஜமிதாரா கட்சி இந்த கூட்டணியில் இல்லை, தங்களது சொந்த பலத்தை நிரூபிக்கும் வகையில் தனித்தே போட்டியிடுவதாக கூறியுள்ளன.
வேட்பாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும்
தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ்க்கு எதிராக 3வது அணி அமைந்து தேர்தலில் மும்முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3வதுஅணி ஸ்திரமானதாக இல்லாமல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருக்கிறது. இதனால் 3வது அணி காங்கிரஸ், பாஜகவிற்கு சவால் விடுக்கும் சூழல் உருவாகவில்லை. எனினும் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சில தொகுதிகளில் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என்று சொல்லலாம்.
2013 தேர்தல் நிலவரம்
பகுஜன் சமாஜ் கட்சி, ஜமிதாரா கட்சி, மார்க்சிஸ்ட் கட்சிகள் 2013 சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டன. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் உடன் கைகோர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் 200 இடங்களிலும் பிஎஸ்பி தனித்தே போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். பிஎஸ்பிக்கு கிழக்கு மற்றும் வடக்கு ராஜஸ்தானில் செல்வாக்கு அதிகம்.
பாஜக - காங்கிரஸ் இடையே போட்டி
இதுவரை ஜனநாய அணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, லோக்தந்திரிக் ஜனதா தளம் மற்றும் சமாஜ்தி கட்சிகள் உள்ளன. ஆனால் இந்த கட்சிகளுக்கு மாநிலத்தில் செல்வாக்கு இல்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ளது மற்ற கட்சிகளுக்கு அந்த அளவிற்கு வாக்கு வங்கி கிடையாது. எனவே ராஜஸ்தான் தேர்தல் களம் இருமுனை போட்டி களமாகவே பார்க்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தாலும் அவை ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன. இவர்களால் நிச்சயம் தேர்தல் வெற்றியில் மாற்றத்தை கொண்டு வர முடியாது எனவே வழக்கம் போல இந்தத் தேர்தல் பாஜக, காங்கிரஸ் இடையே யார் பலசாளிகள் என்பதை நிரூபிக்கும் களம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.