கேரளாவிலும் ஒரு 'கருணாநிதி'....!
திருவனந்தபுரம்: திமுக தலைவர் கருணாநிதியைப் போலவே கேரளாவிலும் ஒரு மூத்த தலைவர் தொடர்ந்து சட்டசபைத் தேர்தல்களில் வென்று வருகிறார். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இரு தலைவர்களும் தற்போது 13வது தொடர் வெற்றியை எதிர்நோக்கி தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்தான் கே.எம். மணி. கேரள காங்கிரஸ் (மணி) தலைவர்.
முன்னாள் நிதியமைச்சரான மணி இதுவரை பலா தொகுதியில் தான் போட்டியிட்ட 12 தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 13வது முறையாக பலா தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
மணி இதுவரை ஒரே ஒரு தொகுதியில்தான் தொடர்ந்து போட்டியிட்டுள்ளார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்தில் பல தொகுதிகளில் போட்டியிட்ட பெருமைக்குரியவர்.
சட்டசபையில் பொன் விழா
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் திமுக தலைவர் கருணாநிதி சட்டசபையில் பொன் விழா கண்டார். அதேபோல சமீபத்தில்தான் கே.எம். மணியும் சட்டசபையில் தனது பொன்விழாவைக் கொண்டாடினார்.
1957 முதல் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி 1957ம் ஆண்டு முதல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். முதல் தேர்தலில் குளித்தலையில் அவர் போட்டியிட்டார். தற்போது திருவாரூரில் களம் கண்டுள்ளார்.
1965 முதல் மணி
அதேபோல கே.எம். மணி 1965ம் ஆண்டு பலா தொகுதியில் முதல் முறைாக போட்டியிட்டார். அதைத் தொடர்ந்து 1967, 70, 77, 80, 82, 87, 91, 96, 2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர்
கேரள சட்டசபையில் அதிக அளவிலான பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தவர் என்ற சாதனையும் மணியிடம் உண்டு. கேரள அரசியலில் அசைக்க முடியாத தலைவராக வலம் வரும் மணிக்கு கடந்த ஆண்டு பெரும் சோதனையாக அமைந்தது.
ஊழலில் சிக்கி பதவியிழந்தவர்
கடந்த ஆண்டு பார் உரிமையாளர்களிடம் பணம் பெற்று அவர்களுக்கு சாதகமாக நடந்ததாக புகார் எழவே வேறு வழியில்லாமல் மணி தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
சாதனையாளர்கள்
கருணாநிதியும், மணியும் இந்தத் தேர்தலில் வென்றால் தத்தமது மாநிலங்களில் தொடர்ச்சியாக 13 முறை வென்ற புதிய சாதனையைப் படைப்பார்கள் என்பதால் இரு மாநிலங்களிலும் இந்தத் தலைவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.