ஜியோ, ஏர்டெல் அதிரடியை சமாளிக்க.. ஐடியாவுடன் கைகோர்க்கும் வோடபோன் !
டெல்லி: ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தின் அதிரடி இலவச சேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த ஆண்டு 4ஜி சேவையை நாடு முழுவதும் தொடங்கியது. இலவச சிம், இலவச கால் அழைப்புகள், இலவச டேட்டா சேவை என பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்தது.
வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகை அளித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிகரித்து வருவது ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. எனவே தொலைதொடர்பு தொடர்பு சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க ஐடியாவுடன் இணைய வோடபோன் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆதித்யா பிர்லா குழுமத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. வோடாபோனைப் பொறுத்த வரை இந்தியாவில் உள்ள 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் 20 கோடி வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகிறது. அதேபோல் ஐடியா தொலைபேசி நிறுவனமும் இதே அளவு வாடிக்கையாளர்களுடன் 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் இயங்கி வருகிறது.
தற்போதைய நிலையில், ஏர்டெல் நிறுவனத்திடம் 27 கோடி வாடிக்கையாளர்களும், ரிலையன்ஸ் ஜியோ 7.2 கோடி வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளள்ளன. வோடபோன் மற்றும் ஐடியா இணைப்பில் இக்கூட்டணி நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 39 கோடியாக உயர்ந்து இந்திய சந்தையில் முதல் இடத்தைப் பிடிக்க உள்ளது.