பதவியேற்புக்கு சத்தமே போடாமல் ஸ்டேடியத்தை புக் செய்த எடியூரப்பா.. கனவு நிறைவேறுமா?
பெங்களூர்: கர்நாடக மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்து வருவதை பார்த்தால் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் கனவு நிறைவேறிவிடும் என்றே தெரிகிறது.
மாநில சட்டசபை தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் காங்கிரஸும், பாஜகவும் தாங்கள் 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றே கூறிவருகின்றன.
பாஜக முன்னிலை
முதலில் தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியவுடன் பாஜக பின்னடைவை சந்தித்து வந்தது. மேலும் தொங்கு சட்டசபையே அமையும் என்ற நிலையும் இருந்து வந்தது. பின்னர் மற்ற வாக்குகளை எண்ணத் தொடங்கியவுடன் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
17-ஆம் தேதி மோடியை அழைப்பேன்
பாஜக 130 தொகுதிகளில் ஆட்சி அமைக்கும் என்றும் வரும் 17-ஆம் தேதி பதவியேற்பு விழாவுக்கு மோடியை அழைப்பேன் என்றும் எடியூரப்பா தெரிவித்திருந்தார். தேர்தலில் பெரும்பான்மையை பெற 112 தொகுதிகள் வேண்டும். அவற்றில் பாஜக 104 இடங்களில் முன்னிலை பெற்றும் 3 இடங்களில் வெற்றி பெற்றும் உள்ளது.
பாஜக வெல்லும்
இதை வைத்து பார்க்கும்போது இன்னும் 7 அல்லது 8 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வெற்றி பெற்றால் அக்கட்சியே ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது. பாஜக மூத்த தலைவர்களும் ஜேடிஎஸ் கட்சியின் தயவே வேண்டாம், தாங்களே தனிபெரும்பான்மை பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கனவு நனவாகும்
எடியூரப்பா வரும் 17-ஆம் தேதி பதவியேற்பு விழாவுக்கு நாள் குறித்தது மட்டுமல்லாமல் எடியூரப்பா இன்னொன்றையும் செய்துள்ளார். அதாவது பதவியேற்பு விழாவுக்கு கன்டீரவா ஸ்டேடியத்தையும் முன்பதிவு செய்துள்ளார் என்றால் அவரது முதல்வர் கனவு எந்தளவுக்கு நனவாகும் என்பதை பார்க்க வேண்டும்.