மோடி அழைத்தால் அவருடன் செல்ல ஜசோதாபென் ரெடி: சகோதரர் பேட்டி
அகமதாபாத்: மோடி அழைத்தால் அவருடன் செல்ல ஜசோதாபென் தயாராக உள்ளார் என்று அவரின் சகோதரர் அசோக் மோடி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தபோது தான் தனக்கு மனைவி இருப்பதை தெரிவித்தார். இதற்கு முன்பு அவர் நான்கு முறை சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டபோது தனக்கு திருமணமானதை தெரிவிக்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தபோது கூட எனக்கு குடும்பம் இல்லை அதனால் நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும் என்று கேட்டார். அதன் பிறகே தனக்கு ஜசோதாபென் என்ற மனைவி இருப்பதை தெரிவித்தார்.
இந்நிலையில் ஜசோதா பென்னின் சகோதரர் அசோக் மோடி கூறுகையில்,
திருமணத்திற்கு பிறகு ஜசோதா பென் மோடியுடன் சேர்ந்து வாழவில்லை. அவர் ஆன்மீக பாதையில் சென்றார். இருப்பினும் தற்போதும் தான் மோடியின் மனைவி என்ற நினைப்பில் தான் உள்ளார். அவர் மோடி பிரதமராகும் வரை அரிசி, அரிசியால் செய்த பலகாரங்களை உண்ண மாட்டேன் என்று விரதம் இருக்கிறார்.
விரதத்தை முடிக்க அவர் மோடியுடன் சேர்ந்து அம்பாஜி கோவிலுக்கு செல்ல ஆசைப்படுகிறார். மோடி அழைத்தால் அவருடன் செல்ல ஜசோதா தயாராக உள்ளார் என்றார்.