தேர்தலில் தோற்றால் பதவி பறிப்பு- காங். முதல்வர்களுக்கு மேலிடம் எச்சரிக்கை!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களின் பதவிகள் பறிக்கப்படும் என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவக் கூடும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் அந்த கட்சிதான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் காங்கிரஸ் ஆளும் அசாம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஹரியானா, ஹிமாச்சல், உத்தர்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கவனம் செலுத்துவது என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது.
இதற்கு ஒரே வழியாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கணிசமான இடங்கள் கிடைக்காவிட்டால் மாநில முதல்வர்களின் பதவிகள் பறிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் காங்கிரஸ் மேலிடம் விடுத்திருக்கிறதாம்.
ஆனால் இதுதான் வாய்ப்பென கருதும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களின் அதிருப்தியாளர்கள் இப்போதிருந்தே உள்ளடி வேலைகளைத் தொடங்கியும் புகார் பட்டியலையும் மேலிடத்துக்கு அனுப்பத் தொடங்கிவிட்டனர்.
இதனால் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.