கர்நாடகாவில் 2 தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல்.. பாஜக வெற்றி கேள்விக்குறி
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற உள்ள 2, சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்களில், பாஜக வெல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளி வந்தன. பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78, மஜத 38 தொகுதிகளையும் கைப்பற்றின. எந்த கட்சிக்கும் 113 என்ற பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
இதையடுத்து பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பாஜக அரசு கலைந்தது.
இதையடுத்து காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு அமைந்து எச்.டி.குமாரசாமி முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு 222 தொகுதிகளுக்கு மட்டுமே மே 12ல் தேர்தல் நடைபெற்றது.
ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் திடீரென மரணமடைந்ததாலும், ராஜராஜேஸ்வரி நகரில் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாலும், தேர்தல்கள் ரத்தாகின.
இதில் ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 28ம் தேதி ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஜெயநகரில் பாஜக வேட்பாளராக மறைந்த சிட்டிங் எம்எல்ஏ ஜெயக்குமாரின் சகோதரர் பிரகலாத் பாபு வேட்பாளராக நியமிக்கப்பட கூடும் என்று தெரிகிறது. அத்தொகுதியில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த சவும்யா ரெட்டி போட்டியிடுகிறார். ஆளும் கட்சியாக இப்போது காங்கிரஸ் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.
ராஜராஜேஸ்வரிநகரில், காங்கிரஸ் சார்பில் முனிரத்னா, மஜத சார்பில் மஞ்சுநாத் ஆகியோர் மக்கள் செல்வாக்குமிக்கவர்கள். இரு தொகுதிகளிலும் போட்டி அதிகமாக உள்ளதால் மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார் மற்றும் சதானந்தகவுடா ஆகிய கர்நாடக பிரமுகர்களை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாம்.