வின்டர் வந்தால் அவ்வளவுதான்.. இந்தியாவுடன் சமாதானம் செய்ய முயலும் சீனா.. பின்னணியில் ஒரே ஒரு காரணம்!
லடாக்: லடாக்கில் இத்தனை நாட்களாக சீனா பிரச்சனை செய்து வந்த நிலையில், தற்போது திடீரென எல்லையில் சமாதானம் செய்ய தீவிரமாக முயன்று வருகிறது. சீனாவின் இந்த சமாதான முயற்சிக்கு முக்கிய காரணம் இருக்கிறது.
லடாக்கில் இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாடுகளும் நீண்ட மோதலுக்கு தற்போது தயாராகி வருகிறது. பேச்சுவார்த்தைகள் எதுவும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. எல்லையில் முழுமையாக அமைதி திரும்பும் வகையில் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை.
இதனால் லடாக்கில் வரும் நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், எல்லையில் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால்தான் இரண்டு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருகிறது.
லடாக்கில் சீனா 38,000 சதுர கி.மீ ஆக்கிரமிப்பு.. அருணாச்சல பிரதேசத்திலும் அத்துமீறல்- ராஜ்நாத் சிங்
ஏன் சீனா முயற்சி
லடாக்கில் கடந்த மே மாதம் சீனாதான் முதலில் அத்துமீறியது. சீனாதான் முதலில் எல்லையில் இந்தியாவை சீண்டியது. கல்வான் மோதலுக்கு கூட சீனாதான் காரணமாக இருந்தது. 20க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் மீறி எல்லையில் சீனாதான் ஒவ்வொரு முறையும் அத்துமீறியது. அதிலும் கல்வான் பகுதியில் அமைதி பேச்சுவார்த்தைக்கு சென்ற இந்திய வீரர்கள் மீது சீனாதான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
சீனா தாக்குதல்
நிலைமை இப்படி இருக்க ஒவ்வொரு முறையும் எல்லையில் இந்தியாவை சீண்டிய சீனா, தற்போது இந்தியாவுடன் எப்படியாவது அமைதியாக செல்ல வேண்டும் என்று நினைக்கிறது. எப்படியாவது பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவை சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறது. இதனால் தான் ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடத்த சீனா தீவிரமாக முயன்றது.
அழைப்பு விடுத்தது
ரஷ்யாவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சீனாவின் கோரிக்கைதான் முழுக்க முழுக்க காரணம். ரஷ்யாவின் மத்தியசம் மூலம் எப்படியாவது எல்லை பிரச்சனையை தீர்க்க சீனா முயன்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் தற்போது பிரிக்ஸ் கூட்டம் மூலம் இந்தியாவை சமாதானம் செய்ய சீனா தீவிரமாக முயன்று வருகிறது. விரைவில் பிரிக்ஸ் கூட்டம் நடக்க உள்ளது.
என்ன காரணம்
சீனாவின் இந்த திடீர் பின்வாங்கலுக்கு முக்கிய காரணம் உள்ளது. சீனா இந்தியாவுடன் இப்போது தற்காலிகமாக மோதலை தவிர்க்க விரும்புகிறது. பனிக்காலத்தில் செப்டம்பர் - ஜனவரி வரை மோத வேண்டாம் என்று சீனா நினைக்கிறது. லடாக் எல்லையில் பனி காலத்தின் போது வெப்பநிலை -50 டிகிரி வரை செல்லும். இதனால் எல்லையில் கண்டிப்பாக போர் என்று வந்தால் சீன வீரர்களால் தாக்கு பிடிக்க முடியாது. இதை நினைத்துதான் சீனா பயப்படுகிறது.
சீனா அச்சம்
இந்தியாவின் வீரர்கள் இந்த பனி காலத்திலும் அசால்ட்டாக வாலிபால் விளையாட கூடிய அளவிற்கு பயிற்சி பெற்றவர்கள். அதிலும் எல்லையில் எளிமையாக பனி, குளிரில் ரோந்து பணிகளை செய்யவும், மலை ஏறவும் பயிற்சி பெற்றவர்கள். இதற்காக திபெத் பூர்வீகத்தை கொண்ட படையினர்,22 எஸ்டாபிளிஷ்மென்ட் பிரிவு வீரர்கள், சிக்கிம் வீரர்கள், சீக்கிய வீரர்கள் என்று தனி தனி குழுக்கள் உள்ளது.
மலை வீரர்கள்
அதோடு இந்தியாவிடம் பனியில் வேகமாக தாக்கும் திறன் படைத்த ''மவுன்டெயின் போர்ஸ்'' உள்ளது. சீனாவிடம் இப்படி சிறப்பு படைகள் எதுவும் இல்லை. சீனாவால் குளிர் காலத்தில் எல்லையில் தாக்கு பிடிக்க முடியாது. இப்போது அங்கு இருக்கும் குளிரை கூட சமாளிக்க முடியாமல் , சீன வீரர்களுக்கு பதப்படுத்தப்பட்ட உணவிற்கு பதில் தினமும் சூடான உணவு பார்சல் டிரோன் விமானம் மூலம் அளிக்கப்படுகிறது .
உடல் ரீதியாக
அதேபோல் உடல் ரீதியாகவும் சீன வீரர்கள் பனியில் ரோந்து செல்ல முடியாது. இந்திய வீரர்கள் போல அதிக குளிரில் ரோந்து செய்யும் உடல் வாகு சீனர்களுக்கு இல்லை. சீன வீரர்கள் எல்லையில் மூச்சு விட கூட சிரமப்பட்ட வீடியோக்கள் கூட சில வாரம் முன் இணையத்தில் வெளியானது. இதனால் பனி காலத்தில் இந்திய வீரர்களை சீண்டுவதை விட மோசமான ஐடியா வேறு இருக்க முடியாது.
பனி காலம்
எல்லையில் இப்போது சீண்டினால் அது சீனாவிற்கு பெரிய தோல்வியை கொடுக்கும். அதனால் பனி காலம் முடியும் வரை எப்படியாவது எல்லையில் அமைதியை தற்காலிகமாக நிலைநாட்ட சீனா முயன்று வருகிறது . இப்போது மோதல் வந்தால் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா எல்லைக்கு படைகளை அனுப்ப வாய்ப்புள்ளது. இதனால் டிசம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை காத்திருக்கவும் சீனா யோசிக்கிறது . இதனால்தான் எல்லையில் சீண்டி வந்த சீனா தற்போது அமைதியை விரும்புவது போல நாடகம் ஆட தொடங்கி உள்ளது.