தொடங்கியது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! இருசபைகளும் ஒத்திவைப்பு!!
தற்போதைய குளிர்கால கூட்டத் தொடரும் வரும் 20-ந்தேதி வரை நடைபெறும். அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் இதில்தான் மசோதாக்களை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க முடியும். அடுத்த ஆண்டு நடக்க உள்ள முதல் தொடர், இடைக்கால பட்ஜெட்டை நிறைவேற்ற மட்டுமே பயன்படும்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அமைச்சர் கமல்நாத், சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் அனைத்துக்கட்சி கூட்டங்களை நடத்தி ஆலோசனை நடத்தினர். சபையை சுமூகமாக நடத்துவதற்கு கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு நாடியது. கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த கூட்டத்தொடரில் 38 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை லோக்சபாவிலும் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதாவை ராஜ்யசபாவிலும் நிறைவேற்றி விட வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றப்போவதாக அறிவித்துள்ள 38 மசோதாக்கள் பட்டியலில் தெலுங்கானா மசோதா இடம்பெறவில்லை. இருப்பினும் இந்த கூட்டத்தொடரில் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ள முக்கிய பிரச்சினைகளில் விலைவாசி உயர்வு, பெண்கள் பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும். இன்று முதல் நாளிலேயே விலைவாசி உயர்வு பிரச்சினையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர பாரதிய ஜனதாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவு செய்துள்ளன.
நாடாளுமன்றம் கூடியது
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூடின. மறைந்த எம்.பிகளுக்கு இரு சபைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டன. அத்துடன் இயற்கை பேரிடரால் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின்னர் லோக்சபா மற்றும் ராஜ்யசபா நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.