பரபரப்பான சூழலில் இன்று துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்கி வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று துவங்கி 14 முறை இரு அவைகளும் கூடுகின்றன.
இந்த கூட்டத் தொடரின்போது 25 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத் தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்குமாறு மோடி அனைத்து கட்சியினரையும் கேட்டுக் கொண்டார்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு கூட்டத் தொடரை நடத்த திட்டமிட்டதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குஜராத் தேர்தல் தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளை சந்தித்ததாக மோடி கூறியது குறித்து காங்கிரஸ் கட்சியினர் இரு அவைகளிலும் கேள்வி எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.