நவ..26 முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர்?... கத்தி சண்டைக்கு தயாராகும் கட்சிகள்!
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதி துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான குறிப்பை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் தேதி குறித்த பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படாத 53 மசோதாக்கள், லோக்சபாவில் நிறைவேற்ற திட்டமிடப்பட்ட 13 மசோதாக்களில் 5 மசோதாக்கள் ஆகியவை நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளன. இதே போன்று மத்திய அரசு நிறைவேற்ற இருந்த சரக்கு சேவை வரி மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் பரிசீலனையில் உள்ளது.
முந்தைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடரை வெற்றிகரமாக நடத்த ஆளும் பாஜக திட்டமிட்டு வருகிறது. வழக்கமாக நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் குளிர்காலக் கூட்டத்தொடர், நடப்பாண்டில் சில நாட்கள் தாமதப்படுத்தி நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.