நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் எப்போது? மத்திய அமைச்சரவை கூட்டம் அக். 26க்கு ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் தேதி குறித்து விவாதிக்க இன்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் முடிவெடுக்காமல் அக்டோபர் 26-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை டெல்லியில் கூடியது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.
இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த்குமார், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பிரதாப் ரூடி, பிரகாஷ் ஜாவ்டேகர், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இக் கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் தேதி குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆனால் முடிவு ஏதும் எடுக்காமல் அக்டோபர் 26-ந் தேதிக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.