மகாராஷ்டிராவில் மூட நம்பிக்கை தடை மசோதா - குளிர்கால கூட்ட தொடரில் தாக்கல்!
புனேயை சேர்ந்த சமூக சேவகர் நரேந்திர தபோல்கர் கடந்த ஆகஸ்டு மாதம் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து மூடநம்பிக்கைகளை தடை செய்யும் மசோதா உடனடியாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து அவசர சட்டம் இயற்றப்பட்டது.
இந்த நிலையில் மூட நம்பிக்கைகளுக்கு தடை விதிக்கும் மசோதா தொடர்பாக மாநிலம் தழுவிய மாநாடு முதல்வர் பிரிதிவிராஜ் சவான் முன்னிலையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பேசிய சவான், அடுத்த வாரம் நடைபெறும் குளிர்கால கூட்டத் தொடரின்போது மூடநம்பிக்கைகளை தடை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சியினருடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
மூட நம்பிக்கை எதிர்ப்பு மசோதா சுமூகமான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக கண்காணிப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர். பொதுமக்கள் உள்பட அரசியல் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்களில் சிலர் ஆதரவு தெரிவிக்கிறார்கள். சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு உள்ள அவசர சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக மாநில அரசு வழக்கு பதிவு செய்து உள்ளது என்றார்.