விப்ரோ சாப்ட்வேர் நிறுவனத்தின் மின் கட்டண பாக்கி ரூ.1.5 லட்சம்: கர்நாடக அமைச்சர் தகவல்
பெங்களூர்: விப்ரோ நிறுவனம், மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய பாக்கித்தொகை ரூ.1.5 லட்சம் என்று கர்நாடக மின்த்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்ட மேலவையில், பாஜக உறுப்பினரும் நடிகையுமான தாரா, மின்சார வாரியங்களுக்கு பெரும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பாக்கித்தொகை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சிவகுமார் அளித்த பதிலில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் பாக்கி வைத்துள்ள சில நிறுவனங்கள் பெயர்களை வாசித்தார். அதில் விப்ரோ நிறுவனமும் ஒன்று.
விப்ரோ லிமிட்டெட், சாப்ட்வேர் இன்டஸ்ட்ரி, பெங்களூர்-560068, என்று சிவகுமார் தாக்கல் செய்த பதில் உரையில் முகவரியோடு விவரம் இடம் பெற்றுள்ளது. இதேபோன்று மொத்தம் 18, நடுத்தர மற்றும் பெரும் நிறுவனங்கள் மின்சார பாக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. விப்ரோ நிறுவனம் வைத்துள்ள பாக்கி ரூ.1.5 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் ரூ.7 லட்சம் வரையிலும், மின்கட்டண பாக்கி வைத்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
முன்னதாக, தாரா பேசுகையில், தனி நபர்கள் சில ஆயிரம், பாக்கி வைத்திருந்தாலும், மின்சார வாரிய ஊழியர்கள் வீட்டுக்கே சென்று மின் இணைப்பை துண்டிக்கிறார்கள். பெரும் நிறுவனங்கள் பாக்கி வைத்திருந்தால் கண்டும் காணாமலும் போகிறார்கள் என்று குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த சிவகுமார், சட்டம் அனைவருக்கும் பொதுவானதே. சில பெரும் நிறுவனங்கள் மின் இணைப்பை துண்டித்துள்ளோம். அவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன என்றார்.