இறந்தவருக்கு உயிர் கொடுப்பதாய் ஏமாற்றிய மந்திரவாதிப் பெண் – அடித்து, உதைத்த மக்கள்!
புவனேஸ்வர்: இறந்து போன வாலிபரை உயிருடன் கொண்டு வருவதாகக் கூறிய மந்திரவாதிப் பெண் ஒருவரை கிராம மக்கள் அடித்து உதைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஒரிசா மாநிலம் மயூர் பிகாஞ் மாவட்டம் ஜோதா பொக்கா கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் சூசன்ட் ஹன்சா.
இவருக்கு, உடல்நிலை சரியில்லாததால் கடந்த 23 ஆம் தேதி அருகில் உள்ள ரைராங்பூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இறந்து போன சூசன்ட்:
அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் வாலிபர் சூசன்ட்ஹன்சா இறந்து விட்டதாக கூறினார்கள்.
அசைந்த கைகள்:
இதையடுத்து, அவரது உடலை மீண்டும் கிராமத்துக்கு கொண்டு சென்றனர். இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது அந்த வாலிபரின் கை அசைந்ததாக சிலர் கூறினார்கள்.
குடும்பத்தினர் நம்பிக்கை:
எனவே அவர் மீண்டும் உயிருடன் எழுவார் என்று குடும்பத்தினர் நம்பினார்கள். ஆனால், மீண்டும் பரிசோதித்த போது உயிர் இல்லை.
மந்திரம் சொன்னால் உயிர் வரும்:
இந்த நிலையில் அங்கு வந்த 3 பெண்கள் இறந்த வாலிபரை உயிருடன் எழுப்புவதாக கூறினார்கள். நாங்கள் மந்திரம் சொன்னால் உயிர் வரும் என்று கிராம மக்களை நம்ப வைத்தனர்.
தப்பி ஓட முயற்சி:
நீண்ட நேரம் மந்திரம் சொன்னார்கள். அதற்கு எந்த பலனும் இருப்பதாக தெரியவில்லை. நிலைமை மோசமாகவே 3 பெண்களில் ஒருவரான பனாஹஸ்தா நைசாக எழுந்து தப்பி ஓட முயன்றார்.
அடித்து, உதைத்த மக்கள்:
அந்த பெண்ணை கிராம மக்கள் மடக்கிப் பிடித்துக் கொண்டனர். தப்பி ஓட முயன்றதால் அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே கம்பத்தில் கட்டி வைத்து சிலர் அடித்து உதைத்தனர்.
போலீசார் கைது:
விசாரணையில் அந்த பெண் போலி மந்திரவாதி என்று தெரிய வந்தது.இதனால் நழுவி தப்ப முயன்ற பெண் சிக்கிக் கொண்டார் என்ற தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர். மற்ற மோசடி பெண்களையும் கைது செய்தனர்.