டோக்லாம் எல்லையில் மீண்டும் பதற்றம்.. 500 ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சாலை அமைக்கிறது சீனா
டெல்லி: டோக்லாம் எல்லையில், சீனா மீண்டும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லை சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பீடபூமி பகுதியை பெய்ஜிங் மற்றும் பூடான் ஆகிய இருநாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால், பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது.
டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க கடந்த ஜூன் மாதம் முயன்றபோது அதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சீனா படைகளை குவித்தது. இந்தியாவும் பதிலுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது.
ஏறக்குறைய 70 நாட்கள் நீடித்தது இந்த பிரச்சினை. இந்தியா - சீனா இடையே தூதரக அளவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாடுகளின் ராணுவம் பரஸ்பரம் பின்வாங்க சம்மதம் தெரிவித்தன.
ஆனால், இதற்கு எந்த விளக்கமும் முழுமையாக இரு தரப்பிலும் வெளியிடப்படவில்லை. இந்த சூழலில், ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்ட டோக்லாம் என்ற இடத்தில் இருந்து சரியாக 10 கி.மீட்டர் தொலைவில் சீனா சாலையை விரிபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுமார் 500 வீரர்கள் பாதுகாப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீனா மேற்கொள்ளும் பணிகளால் மீண்டும் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.