அதிமுக நினைத்தால் பாஜக கனவைத் தகர்க்க முடியும்.. எப்படி தெரியுமா?
டெல்லி: பாஜக அறிவித்துள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறவே பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மீரா குமாருக்கு வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
மொத்த ஓட்டுக்களில் 63.1 சதவீத வாக்குகள் பாஜக கூட்டணியிடம் இருப்பதால் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவது சுலபமாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைவரும் ஆச்சரியப்படும்படியாக மீரா குமாரை நிறுத்தியிருந்தாலும் கூட இந்த முடிவில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.
பாஜகவிடம் மட்டும் 49 சதவீத வாக்குகள் உள்ளன. கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைச் சேர்த்தால் அது 63.1 சதவீத ஓட்டாக உயர்கிறது.
இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறாத வேறு சில கட்சிகளும் அடக்கம். அதில் பெரிய வாக்கு வங்கி அதிமுகதான். அதன் வாக்கு அளவு 5.39 சதவீதமாகும்.
பிஜூ ஜனதாதளம் 2.99, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 2, ஐக்கிய ஜனதாதளம் 1.91, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 1.53, இந்திய தேசிய லோக்தளம் 0.38 சதவீத வாக்குகளை வைத்துள்ளன. சிவசேனாவின் 2.34 வாக்கும் இதில் அடக்கம்.
அதிமுகவின் வாக்குகள் மொத்தமாக பாஜகவுக்குக் கிடைப்பதால்தான் அதன் வெற்றி வாய்ப்பு மிக சுலபமாகியுள்ளது. அதிமுக மட்டும் சற்று வலிமையான தலைமையுடன் இருந்திருந்தால், பாஜகவின் வெற்றி இத்தனை சுலபமாகியிருக்க வாய்ப்பில்லை.