தீவிரமாகும் சிஏஏ போராட்டம்.. அதிகரிக்கும் வெளிநாட்டு அழுத்தம்.. தவறான இடத்தில் கைவைத்துவிட்டதா அரசு?
தொடர் சிஏஏ போராட்டம் மற்றும் ஐரோப்பா யூனியனின் சிஏஏவிற்கு எதிரான தீர்மான மசோதா ஆகியவற்றால் மத்திய அரசுக்கு பெரிய அளவில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: தொடர் சிஏஏ போராட்டம் மற்றும் ஐரோப்பா யூனியனின் சிஏஏவிற்கு எதிரான தீர்மான மசோதா ஆகியவற்றால் மத்திய அரசுக்கு பெரிய அளவில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு எப்படி எதிர்வினையாற்ற போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த போராட்டம் வலுவடைந்து கொண்டே செல்கிறது. குடியுரிமை மசோதா கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது.
இது எங்கள் உள்நாட்டு விஷயம்.. சிஏஏவிற்கு எதிரான ஐரோப்பா தீர்மானத்திற்கு மத்திய அரசு பதிலடி!
நீடிக்கும் போராட்டம்
இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடக்கிறது. முக்கியமாக டெல்லியில் ஷாகீன் பாக், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், ஜேஎன்யூ, ஹைதராபாத் பல்கலைக்கழகம், கேரளாவில் நேற்று நடந்த மனித சங்கிலி போராட்டம், வடகிழக்கு மாநிலங்களில் ஒரு மாதமாக நடக்கும் போராட்டம் என்று நாடு முழுக்க போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. சில நாட்களில் இந்த போராட்டம் மறைந்து போகும் என்றுதான் பாஜக அரசு நினைத்தது. ஆனால் தொடர்ந்து போராட்டம் வலுவடைந்து கொண்டே செல்கிறது.
சில தலைவர்கள்
முக்கியமாக இந்த போராட்டம் கண்ணன் கோபிநாத், சந்திரசேகர் அசாத், கன்னையா குமார் உள்ளிட்ட தலைவர்களை நாட்டிற்கு அடையாளம் காட்டியுள்ளது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் நாடு முழுக்க இதற்காக பயணம் செய்து மக்கள் இடையே பேசி வருகிறார். பீம் ஆர்மியின் சந்திரசேகர் அசாத் நாடு முழுக்க புதிய ஹீரோவாகவே உருவெடுத்துவிட்டார். அதேபோல் கன்னையா குமாரின் அசாதி கோஷம் வடக்கு முதல் தெற்கு வரை ஒருங்கே மக்களை இணைக்க தொடங்கி உள்ளது.
அரசுக்கு அழுத்தம்
இந்த போராட்டங்கள் மத்திய அரசுக்கு பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. நேற்று குடியரசுத் தினத்தின் போது கூட, மக்கள் நாடு முழுக்க இதற்காக போராட்டம் செய்தனர். இது மத்திய பாஜக அரசை கொஞ்சம் அசைத்து பார்த்துள்ளது. இதனால்தான் டெல்லியில், பிரச்சாரத்திற்காக செல்லும் இடங்களில் எல்லாம் அமித் ஷா, ஷாகீன் பாக் போராட்டம் குறித்து பேசி வருகிறார். ஷாகீன் பாக் இல்லாத இந்தியாவையே உருவாக்குவோம் என்று அமித் ஷா இதனால்தான் தொடர்ந்து கூறி வருகிறார்.
புதிய அழுத்தம்
இதேபோல் இன்னொரு பக்கம் இந்த சிஏஏ சட்டத்திற்கு வெளிநாடுகளும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் சிஏஏ சட்டம் காரணமாக பல லட்சம் மக்கள் நாட்டை இழந்து அகதிகளாக மாறும் நிலை ஏற்படலாம் என்று ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 600 எம்பிக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் 6 முக்கிய அம்சங்களை கொண்ட தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். இந்த தீர்மானத்தின் நகல் தற்போது வெளியாகி உள்ளது.இதனால் பல லட்சம் நாடுகளை இழக்கும் மோசமான நிலை ஏற்படும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா எப்படி
இன்னொரு பக்கம் ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் 6 மாதங்களாக வீட்டு சிறையில் இருப்பதையும், நாட்டில் நடக்கும் சிஏஏ போராட்டங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் முதன்மை துணை உதவி செயலாளர், ஆலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் முதன்மை துணை உதவி செயலாளர், ஆலிஸ் வெல்ஸ் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் கொண்டு வரப்பட்டு இருக்கும் சிஏஏ சட்டம் நேர்மையானது இல்லை.
எப்படி பாகுபாடு
அது பாகுபாடு பார்க்கும் சட்டம் ஆகும். இஸ்லாம் மதத்தை மட்டும் விட்டுவிட்டு இப்படி சட்டம் கொண்டு வருவது மிகவும் தவறானது. அது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவில் நடக்கும் போராட்டங்களை அமெரிக்கா கவனித்து வருகிறது. சிஏஏ சட்டம் தொடர்பாக நடந்து வரும் மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மக்கள் இதற்கு எதிராக தெருவில் இறங்கி போராடுவது எங்களுக்கு தெரியும். மீடியாக்களில் வரும் செய்திகளை பார்க்கிறோம். அரசியல் தலைவர்கள் பேசும் கருத்துக்களை பார்க்கிறோம், என்று ஆலிஸ் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் வரும்
இதனால் அமெரிக்காவின் தரப்பில் இருந்தும் விரைவில் சிஏஏவிற்கு எதிராக அழுத்தங்கள் நேரடியாக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு வரிசையாக வெற்றிகரமாக திட்டங்களை நிறைவேற்றி வந்தது. அதில் ஒரு கனவு திட்டமான சிஏஏ அந்த கட்சிக்கு மிகப்பெரிய சிக்கலாகி உள்ளது. சிஏஏவிற்கு எதிராக எழும் உள்நாட்டு போராட்டங்கள், வெளிநாட்டு அழுத்தங்கள் எல்லாம், மத்திய அரசை கொஞ்சம் ஆட்டிப்பார்த்துள்ளது. இதனால் மத்திய அரசு வைக்க கூடாத இடத்தில் கை வைத்துவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.