சசி அக்கா மகன் சுதாகரன் கோர்ட்டில் ஆஜர்: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு!
அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக சசிகலா அக்காள் மகன் சுதாகரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூரு சிறையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டார்.
பெங்களூரு : அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக சசிகலா அக்கா மகன் சுதாகரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார். அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்கா மகன் சுதாகரன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று தண்டனை உறுதியானதால் கடந்த பிப்ரவரி 15ம் தேதி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பெண்கள் சிறையில் சசிகலா, இளவரசி மற்றும் ஆண்கள் சிறையில் சுதாகரனும் அடைக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்து விட்டன.
இந்நிலையில் அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக சுதாகரனை ஆஜர்படுத்த வேண்டும் என்று கடந்த மாதம் 10ம் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்டிப்பு காட்டினார். இதனையடுத்து சுதாகரன் ஜுன் 7ம் தேதி சென்னை அழைத்து வரப்படுவதாக பரபரப்பு கிளம்பியது. குற்றவாளி சுதாகரனை சாலை மார்க்கமாக அழைத்து வருவதில் சிக்கல் உள்ளதாக கர்நாடக சிறைத்துறையினர் தெரிவித்தனர். இதனால் அப்போது அவர் அழைத்து வரப்படவில்லை.
திடீர் ஆஜர்
வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராக சுதாகரன் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. திடீரென இன்று சுதாகரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மோசடி வழக்கு
ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த 1996-97-ஆம் ஆண்டு ஒளிபரப்பு சாதனங்கள் வாங்குவதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.
20 ஆண்டு வழக்கு
கடந்த 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சசிகலாவிற்கு மட்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராக நீதிபதி அனுமதி அளித்தள்ளார்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கு விசாரணையில் பாஸ்கரன் மீதும் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. நீதிமன்றத்தில் சுதாகரனும், பாஸ்கரனும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி மலர்மதி கூறியுள்ளார்.