மத்தியில் மோடி.... மாநிலத்தில் நான்.... அப்போதான் காவிரி பிரச்சினைக்கு தீர்வு... எடியூரப்பா உறுதி
கர்நாடகத்தின் முதல்வராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
டெல்லி: மத்தியில் பிரதமராக மோடி இருக்கும்போது மாநிலத்தின் முதல்வராக தான் இருந்தால் மட்டுமே காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வரும் 2018-இல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் பாஜக முதல்வர் வேட்பாளராக முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாநிலத்தின் பாஜக தலைவராக உள்ள எடியூரப்பா டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது பல ஆண்டுகளாக பிரச்சினையில் உள்ள காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு தான் முதல்வரானால் மட்டுமே தீர்வு காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகள் பிரச்சினை
அப்போது அவர் கூறுகையில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நதி நீர் பங்கீடு என்பது நீண்ட நாள் பிரச்சினையாக உள்ளது. இதை தீர்க்க வேண்டும் என்றால் அடுத்த ஆண்டு கர்நாடகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து தன்னை முதல்வராக தேர்ந்தெடுத்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.
மத்தியில் அவர்... மாநிலத்தில் நான்....
மத்தியில் நரேந்திர மோடி பிரதமராக உள்ள நிலையில் மாநிலத்தில் நான் முதல்வரானால் நாங்கள் இருவரும் சேர்ந்து தீர்க்கமுடியாத பிரச்சினையாக மாறியுள்ள காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்றார். அதாவது மாநிலத்தில் தாமரைக்கு வாக்களித்தால் மட்டுமே பிரச்சினைகள் தீரும் என்பதை போல் கூறியுள்ளார்.
காவிரி பிரச்சினை
தமிழகத்துக்கும் , கர்நாடகத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வதில் தீர்க்க முடியாத பிரச்சினையாக மாறிவிட்டது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி, விவசாயிகள் போராட்டம் ஆகியன காவிரி பிரச்சினைக்கு உயிர்பித்து வருகின்றன. இது இரு மாநிலங்களிலும் தேர்தலின் போது அளிக்கக் கூடிய வாக்குறுதியாக இருந்து வருகிறது.
சூறாவளி சுற்றுப்பயணம்
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மாநிலம் முழுவதும் அவர் தலித்துகளை திருப்திப்படுத்தும் விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். தலித்துகளின் வீடுகளுக்கு செல்வது அவர்களின் வீடுகளில் உணவு சாப்பிடுவது உள்ளிட்ட செயல்பாடுகளில் கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவுக்கு வழக்கமாக வாக்களிக்காத ஜாதியினரை அடையாளம் கண்டு அவர்களை திருப்திப்படுத்தும் செயல்களில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது.