காலுக்குக் கீழ் மோடி படம் போட்டு அழைப்பிதழ்... சிலை திறப்பு விழாவைப் புறக்கணித்தார் ரோசய்யா!
குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா தொடர்பான அழைப்பிதழில் பிரதமர் மோடி படத்தை, தனது காலுக்குக் கீழே வருமாறு போட்டிருந்ததால் அதிருப்தி அடைந்த தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, சிலை திறப்பு விழாவுக்குச் செல்லாமல் ரத்து செய்து விட்டார்.
குண்டூர் மாவட்டம் சிலகலூரிப்பேட்டை என்ற இடத்தில் மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை உள்ளூரைச் சேர்ந்த கண்டசாலா பங்காரு பாபு என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். அவரது செலவில் இந்த சில அமைக்கப்பட்டுள்ளது. இதை திறக்குமாறு தமிழக ஆளுநராக உள்ள ரோசய்யாவுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இதற்கான அழைப்பிதழ்தான் வில்லங்கமாக அமைந்திருந்தது.
அந்த அழைப்பிதழில் ரோசய்யா நிற்பது போல படம் போட்டிருந்தனர். அருகே உள்ளூர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களின் படங்கள் பிரதானமாக உள்ளது. அதேசமயம், காந்தி மற்றும் நரேந்திர மோடி, அமீத் ஷா போன்ற பாஜக தலைவர்களின் படங்களை ரோசய்யாவின் காலுக்குக் கீழே வருமாறு போட்டிருந்தார் கண்டசாலா. இது சர்ச்சையைக் கிளப்பியது. உள்ளூர் பாஜக தலைவர்கள் இந்த அழைப்பிதழுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தநர். மேலும் ரோசய்யாவுக்கும் இதுதொடர்பாக அவர் கடிதம் அனுப்பினர்.
இதையடுத்து ரோசய்யா தனது வருகையை ரத்து செய்து விட்டார். சிலை திறப்பு விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. இது தனிப்பட்ட நபர் ஏற்பாடு செய்திருந்த விழா என்றாலும் கூட புரோட்டோகால் சர்ச்சை கிளம்பியதால் தனது பயணத்தை ரத்து செய்து விட்டாராம் ரோசய்யா. தேவையில்லாமல் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாக அவர் விரும்பவில்லையாம்.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஆளுநராக நியமிகப்பட்டவர்களில் ரோசய்யா மட்டுமே மிஞ்சியுள்ளார். மற்ற அனைத்து ஆளுநர்களும் மாற்றப்பட்டு விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
2011ம் ஆண்டு தமிழக ஆளுநரான ரோசய்யாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது.