திட்டக் குழுவுக்கு மாற்றான 'நிதி ஆயோக்' அமைப்பில் யார் யாருக்கு இடம்?
டெல்லி: திட்டக் குழுவுக்கு மாற்றாக மத்திய அரசு உருவாக்கியிருக்கும் 'நிதி ஆயோக்' அமைப்பில் 4 மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1950-ம் ஆண்டு மத்திய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் திட்ட கமிஷன் உருவாக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் நேரு இதை உருவாக்கினார். மாநிலங்களுக்கான திட்ட நிதி ஒதுக்கீட்டை இந்த திட்ட கமிஷன் செய்து வருகிறது.
மாறிவரும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப 65 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்த திட்ட கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையின்போது அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 7-ந் தேதி மாநில முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களைத் தவிர பிற கட்சிகளின் முதல்வர்கள் புதிய அமைப்பை உருவாக்க ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் திட்ட கமிஷனுக்கு பதிலாக உருவாக்கப்படும் புதிய அமைப்பை மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன்பெயர் ‘நிதி ஆயோக்'.
அதாவது ‘நேஷனல் இன்ஸ்டிடியூசன் ஃபார் டிரான்ஸ்பார்மிங் இந்தியா' ((National Institution for Transforming India) என்பதன் சுருக்கமே ‘நிதி' (NITI) ஆகும். இதனால் 'நிதி ஆயோக்' என்று மத்திய அரசு இதற்கு பெயரிட்டுள்ளது.
நிதி ஆயோக் என்பது என்ன?
- பிரதமர் இந்த அமைப்பின் தலைவராக இருப்பார். இதில் ஒரு தலைமை செயல் அதிகாரியும், ஒரு துணைத்தலைவரும் இருப்பார்கள். இவர்களை பிரதமர் நியமிப்பார்.
- முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த 2 பேர், பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். சில முழு நேர உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள். இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
- இதில் 4 மத்திய அமைச்சர்கள் அலுவல் சார் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
- இந்த புதிய அமைப்புக்குரிய ஆட்சி மன்ற குழுவில் அனைத்து மாநில முதல்வர்களும் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களும் இடம்பெறுவர்.
- பிராந்திய அளவிலான குழுக்களும் அமைக்கப்படும். இதில் பல்துறை வல்லுநர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக இடம்பெறுவர். இவர்களையும் பிரதமரே நியமிப்பார்.