ஜிக்கா வைரஸ் இந்தியாவில் இல்லை, ஆனால் பரவினால்...: டாக்டர்கள் எச்சரிக்கை
பெங்களூர்: சோதனை மையங்கள், வசதிகள் இல்லாத நிலையில் ஜிக்கா வைரஸ் இந்தியாவில் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் கருவில் உள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு அவர்கள் சிறிய தலையுடன் பிறக்கிறார்கள். ஜிக்கா வைரஸ் டெங்கு, சிக்குன்குனியா நோய்களை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது.
ஜிக்கா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் ஜிக்கா வைரஸ் இந்தியாவில் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள டாக்டர்கள் ஜிக்கா வைரஸ் குறித்த விபரங்களை சேகரிப்பதுடன் அது குறித்து வாட்ஸ்ஆப் குரூப்களிலும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் மத்திய மற்றும் மாநில சுகாதாரத் துறைகள் இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாட்டில் ஜிக்கா வைரஸ் சோதனை மையங்கள் இல்லை, விமான நிலையங்களில் பயணிகளுக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று கண்டறியப்படுவது இல்லை, வைரஸ் பரவினால் அதை எப்படி சமாளிப்பது என்றும் மக்களுக்கு அறிவுரை வழங்கப்படவில்லை.
ஜிக்கா வைரஸ் இந்தியாவில் இன்னும் பரவவில்லை. அதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை தலைவர் டாக்டர் ஜி.எம். வாமதேவா தெரிவித்துள்ளார்.
மணிப்பால் மருத்துவமனை டாக்டர் சதீஷ் அமர்நாத் கூறுகையில்,
ஜிக்கா வைரஸ் இந்தியாவில் பரவும் அபாயம் உள்ளது. ஏராளமான இந்தியர்கள் தென் அமெரிக்காவுக்கு சென்று வருகிறார்கள். ஜிக்கா வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய விமான நிலையங்களில் மத்திய அரசு வசதி செய்து கொடுக்க வேண்டும். சோதனை செய்து ஜிக்கா வைரஸை கண்டுபிடிக்கும் அளவுக்கு நம்மிடம் வசதிகள் இல்லை என்றார்.
ஜிக்கா வைரஸ் இந்தியாவில் பரவினால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் தான் மோசமாக பாதிக்கப்படும் என்று டாக்டர் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரியின் துணை பேராசிரியர் எஸ்.எம். பிரசாத் கூறியுள்ளார்.