ஓய்வுக்கு பிறகு அப்துல் கலாம் வீட்டில் தங்கும் பிரணாப்... அரசு சார்பில் என்னென்ன வசதிகள்?
குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் பிரணாப் முகர்ஜி தங்குவதற்கு அப்துல் கலாம் வாழ்ந்த வீடு தயாராகி வருகிறது.
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஓய்வுக்கு பிறகு டெல்லி ராஜாஜி மார்க்கில் அப்துல் கலாம் தங்கியிருந்த வீட்டில்தான் தங்க போகிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்றார். தற்போது 5 ஆண்டுகள் நிறைவடைந்து வரும் 25-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.
இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 99 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றது. இப்பதவிக்கு பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீராகுமாரும் நிறுத்தப்பட்டனர்.
வரும் 20-ல் வாக்கு எண்ணிக்கை
வரும் 20-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுக் கொள்கிறார்.
கலாமின் வீடு
முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் தனது ஓய்வுக்கு பிறகு நம்பர் 10, ராஜாஜி மார்க்கில் உள்ள வீட்டில் குடியேறினார். தற்போது அவர் காலமாகிவிட்டதை அடுத்து அந்த வீடு பிரணாப் முகர்ஜிக்கு ஒதுக்கப்படுகிறது. 11,776 சதுர அடி கொண்ட அந்த பங்களாவானது பிரணாப் முகர்ஜிக்காக தயாராகி வருகிறது.
புத்தகங்கள் படித்தே....
பிரணாப் முகர்ஜிக்கு புத்தகம் படிப்பதும் எழுதுவதும்தான் பொழுதுப்போக்கு. எனவே ஓய்வுக்கு பிறகும் அவர் அப்பணிகளில் மும்முரமாக ஈடுபட ஏதுவாக அவருக்காக
அவருடைய புத்தகங்களை அடுக்கி வைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. கடந்த 1951-ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கான ஊதியங்கள் சட்டத்தின் படி, ஒரு முன்னாள் குடியரசுத் தலைவருக்கு அனைத்து வசதிகளும் கொண்ட, வாடகை இல்லாத குடியிருப்பு வழங்குவது மரபு. அந்த குடியிருப்பில் அவர் வாழ்நாள் முழுவதும் தங்கிக் கொள்ளலாம்.
என்னென்ன வசதிகள்
அவருக்கென 2 தொலைபேசி இணைப்புகள் இருக்கும். அதில் ஒன்றை இணையதள பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தேசிய அளவில் ரோமிங்குடன் கூடிய மொபைல் போனும் வழங்கப்படும். கார் வசதி, இரு தனி செயலாளர்கள், இரு அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படுவர். முன்னாள் குடியரசுத் தலைவருக்கு மருத்துவ வசதிகளும், இலவசமாக இந்தியா முழுவதும் செல்லவும், விமானத்தில் சொகுசு வகுப்பில் பயணமும் அளிக்கப்படும். இவருடன் ஒருவர் செல்லலாம்.