ஆக்கிரமித்து கட்டப்பட்ட அஸராம் பாபுவின் ஆசிரமம் இடித்து தரைமட்டம்
வசாய்: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அஸராம் பாபுவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் விரார் கிழக்கு மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் பலாத்கார புகாரில் சிக்கிய சாமியார் அஸராம் பாபுவின் ஆசிரமம் உள்ளது. அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இந்த ஆசிரமம் கட்டப்பட்டிருந்தது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாக அஸராம் பாபுவின் மகன் நாராயண சாய் தமது உதவியாளராக வேலை செய்து வந்த மகேந்திர சிங் சாவ்லாவின் பெயரில் அந்த இடத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல் மகேந்திர சிங் சாவ்லாவிற்கு தெரியவந்ததும் அவர் நாராயணசாயிடம் உதவியாளராக வேலை செய்வதை நிறுத்திவிட்டார்.
மேலும் இதுதொடர்பாக நாராயண சாய் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்குமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து வசாய்-விரார் மாநகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் ஆகியோர் ஆசிரமம் இருந்த இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில் ஆசிரமம் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரமத்தை காலி செய்யுமாறு ஆசிரம நிர்வாகிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்கள் ஆசிரமத்தை காலி செய்யவில்லை.
இதனையடுத்து நேற்று காலையில் அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அஸராம் பாபுவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.