முதல்வர் சித்தராமையா கூறியதால் சசிகலாவுக்கு சிறையில் சில சலுகைகள் வழங்கினேன்: முன்னாள் டிஜிபி பகீர்
முதல்வர் சித்தராமையா கூறியதால் சசிகலாவுக்கு சிறையில் சில சலுகைகளை வழங்கியதாக முன்னாள் டிஜிபி சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் சித்தராமையா கூறியதால் சசிகலாவுக்கு சிறையில் சில சலுகைகளை வழங்கியதாக முன்னாள் டிஜிபி சத்தியநாராயணா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில், தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார்.
அரசிடம் அறிக்கை
மேலும் சிறையில் போதைப்பொருட்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
சத்தியநாராயணா மீது வழக்கு
அந்த அறிக்கையில் சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை தடுக்க சில பரிந்துரைகளும் அரசுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக முன்னாள் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படையால் அண்மையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முதல்வர் கூறியதால்
இதுதொடர்பாக ஊழல் தடுப்பு படை போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் சித்தராமையா கூறியதால், சசிகலாவுக்கு சிறையில் சில சலுகைகள் வழங்கினேன் என முன்னாள் டிஜிபி சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.
சிறப்பு சலுகைகள்
இந்த வழக்கு தொடர்பாக கர்நாடகா ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் சத்தியநாராயணா இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சசிகலாவுக்கு கட்டில், தலையணை போன்ற சலுகைகள் வழங்கியதாக மனுவில் சத்தியநாராயணா தகவல் தெரிவித்து உள்ளார்.