அடுத்த வருடம் குஜராத் சட்டசபை தேர்தல்: சோம்நாதர் கோயில் தரிசனத்துடன் பிரசாரத்தை தொடங்கிய கேஜ்ரிவால்
ராஜ்கோட்: குஜராத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அங்குள்ள கோயிலில் வழிபாடு செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சி தற்போதே களத்தில் குதித்துள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத்துக்கு, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான கேஜ்ரிவால் இன்று ஒருநாள் பயணம் மேற்கொண்டார்.
குஜராத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியை பலப்படுத்தும் நோக்கில் இந்த பயணத்தை கேஜ்ரிவால் மேற்கொண்டதாக தெரிகிறது.
முதலில் தனது குடும்பம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ராஜ்கோட் சென்ற அவர், பின்னர் பிரசித்தி பெற்ற சோம்நாத் சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். குஜராத் முதல்வர் ஆனந்திபென் பாட்டீலை தாக்கிப் பேசி அவர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
அப்போது கேஜ்ரிவால் கூறியதாவது: நான் இரண்டு நாட்கள் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். இன்று சோம்நாத் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, பின்னர் நாளை சூரத்தில் நிகழ்சியொன்றில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் குஜராத் முதல்வர் ஆனந்திபென் பாட்டீல் கொடுத்த நெருக்கடி காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
பட்டேல் சமூதாயத்திற்காக போராடிய ஹர்திக் பட்டேல் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் எக்நாத் காட்ஷி மீது அது போன்ற வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
எக்நாத் காட்ஷியின் செல்போனுக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. இருந்த போதிலும் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அவர்களது கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது என்று கூறினார்.
இந்த சுற்றுப் பயணத்தின் போது கேஜ்ரிவால் அங்குள்ள கிராமங்களான ஜுனாகத், கிர் சோம்நாத், மற்றும் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்தார். ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் விவசாயிகள் நல்ல முறையில் வழிநடத்தப்படுவார்கள் என கேஜ்ரிவால் உறுதியளித்தார்.