பாபு இல்லாம ஊருக்கு திரும்ப மாட்டோம்.! ரேணிகுண்டாவில் பாசப்போராட்டம் நடத்தும் குஜராத் தம்பதி
ரேணிகுண்டா: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி வந்த குஜராத் தம்பதியினர், தங்களது வளர்ப்பு பூனையை தொலைத்து விட்டதால் ரேணிகுண்டா ரயில் நிலையத்தை விட்டு நகராமல் 24 நாட்களுக்கும் மேலாக தங்கியுள்ள சம்பவம் காண்போரை நெகிழச் செய்துள்ளது.
குஜராத்தை சேர்ந்தவர்கள் ஜெயேஷ் பாய் - மீனா பென் தம்பதியினர், இவர்களுக்கு திருமணமாகி சுமார் 17 ஆண்டுகள் கடந்து விட்டது. எனினும் இவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கவில்லை.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த தம்பதியினர் ஆசை ஆசையாக குழந்தையை போல நினைத்து, பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அதற்கு பாபு என்று செல்லப் பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தனர். வெளியே எங்கு சென்றாலும் தங்களுடன் வளர்ப்பு பூனையையும் கூட்டி செல்வது இவர்கள் வழக்கம்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 9-ம் தேதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி வந்தனர். கூடவே தங்களது பாபுவையும் எடுத்து வந்துள்ளனர். திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்தை முடித்த தம்பதியினர், 3 நாட்கள் திருமலையில் தங்கியுள்ளனர். பின்னர்13-ம் தேதி ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த போது ஜெயேஷ் - மீனா தம்பதியினரின் மகனாக வளர்ந்து வந்த பாபுவை (பூனையை), மர்மநபர்கள் யாரோ தூக்கி சென்று விட்டனர். ரயில் ஏறுவதற்கு முன்னர் தான் பாபு காணாமல் போனது அவர்களுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் விரைந்து சென்று ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
ஆனால் பூனையை காணோம் என்று எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடுவது என போலீஸார் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். பின்னர் தம்பதியை சமாதானப்படுத்தி நீங்கள் குஜராத் புறப்பட்டு போங்க என கூறியுள்ளனர். ஆனால் பாபுவை காணாமல் மனமுடைந்த அவர்கள் ஊருக்கு திரும்பி செல்ல மறுத்து ரேணிகுண்டா ரயில் நிலையத்திலேயே தங்கியுள்ளனர்.
எப்படியும் தங்களது பாபுவை கண்டறிந்து அவனையும் கூட்டி கொண்டு தான் சொந்த ஊர் திரும்புவது என்ற தீர்மானத்துடன், அவர்கள் ஓரிரு நாட்கள் அல்ல சுமார் 24 நாட்களாக ரேணிகுண்டா ரயில்வே ஸ்டேஷனிலேயே காத்து கொண்டிருக்கிறார்கள். இடையில் யாரோ இவர்களிடம் பாபுவை கண்டறிந்து தருவதாக கூறி ஆயிரக்கணக்கில் பணம் கேட்டுள்ளார்.
பாபு கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்த தம்பதியினர், மர்ம நபருக்கு பணத்தை அள்ளி கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நபர் பணத்தை வாங்கியதோடு சரியாம், அதன் பிறகு இவர்கள் கண்ணில் தென்படவே இல்லையாம். பாபுவுடன் தான் திரும்ப செல்வது என்ற முடிவில் உள்ள தம்பதியினரை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.
பாபுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்துக்கொண்டு அங்குள்ள கடை வியாபாரிகளிடமும், பொதுமக்கள் என வீதிவீதியாக சென்று தம்பதியினர் தேடி வருகின்றனர்.
நம் கண்களுக்குதான் பாபு வளர்ப்பு பூனை, ஆனால் அவர்களை பொருத்த வரை பாபு அவர்களது மகன்...