மும்பை மின்சார ரயிலில் அதிகரிக்கும் “வித் அவுட்” பயணம்- கிட்டதட்ட ரூ.6 கோடி அபராதம் வசூல்!
மும்பை: மும்பையில் கடந்த மாதத்தில் மின்சார ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடத்திலிருந்து கிட்டதட்ட 6 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் மின்சார ரயில்களில் உரிய டிக்கெட் இன்றி ஓசிப்பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய ரயில்வே வழித்தடங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் மின்சார ரயில்களில் ஓசிப்பயணம் மற்றும் முறையான டிக்கெட் இன்றி பயணம் செய்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து அபராதமாக ரூபாய் 6 கோடியே 23 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய ரயில்வே வழித்தடத்தில் ஓசிப்பயணம் செய்ததாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 5 கோடியே 54 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 12.39 சதவீதம் அதிக அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத முன்பதிவு டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணம் செய்ததாக 269 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 2 லட்சத்து 19 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதத்தில் மின்சார ரயில்களில் ஓசிப்பயணம் செய்ததாக 11 லட்சத்து 47 ஆயிரம் பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 59 கோடியே 63 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் வசூல் செய்யப்பட்ட அபராத தொகையுடன் ஒப்பிடும் போது இது 34.54 சதவீதம் அதிகம் ஆகும். இதில் கடந்த ஆண்டு 44 கோடியே 32 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டு இருந்தது. இந்த தகவல்கள் மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.