ஓடும் ரயிலில்.. லேடீஸ் கோச்சில் பெண் பலாத்காரம்.. நகைகள் கொள்ளை.. டெல்லி ஷாக்!
டெல்லியில் ஓடும் ரயில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : ஷதாரா - டெல்லி ரயில்வே ஸ்டேஷன் இடையே பெண்களுக்கான பெட்டியில் ஏறிய 3 பேர் அதில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்துள்ளார். அந்தப் பெட்டியில் பயணித்த மற்ற 4 பெண்கள் ஷதாரா ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியுள்ளனர். அப்போது அங்கிருந்து 3 ஆண்கள் பெண்கள் பெட்டியில் ஏறியுள்ளனர்.
அவர்களில் 2 பேர் அந்தப் பெண் வைத்திருந்த நகைப்பையை திருடிக்கொண்டு தப்பியோடிவிட்டனர். மூன்றாவது நபர் அவரை அடித்து தாக்கியதோடு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அடுத்த ஸ்டேஷனில் ஏறிய 2 போலீஸ் காவலர்கள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அந்த பெண் போராடுவதைக் கண்டனர்.
இதையடுத்து அந்த நபரை பிடித்து 'கவனித்த' போலீசார் பழைய டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி 2 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் ஷபாஸ் என்பதும் அவருககு 25 வயது என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நகையுடன் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். ஓடும் ரயிலில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.