போலீஸ்காரர்களால் 20 வயது இளம் பெண் 10 நாட்கள் லாக்கப்பில் இரவு பகலாக கதற கதற பலாத்காரம்.. ஷாக்
போபால்: மத்திய பிரதேசத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட போலீஸ்கார்கள் 5 பேர் சேர்ந்து, 20 வயது இளம் பெண்ணை அறையில் பூட்டி வைத்து 10 நாட்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த பெண், சிறையில் ஆய்வுக்கு வந்த நீதிபதியிடம் நடந்த சம்பவத்தை சொல்லி கதறியுள்ளார். இது தொடர்பாக நீதித்துறை விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சினிமாவை மிஞ்சும் சம்பவம் ஒன்று நடந்ததாக பரபரப்பு எழுந்துள்ளது.
இந்த மாநிலத்தில் காவல்துறையில் பணியாற்றும் சிலர் சேர்ந்து இளம் பெண்ணை 10 நாட்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொலை வழக்கு குற்றவாளி
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மாங்கவன் போலீஸ் ஸ்டேசன் லாக் அப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீஸ்காரர்கள் சேர்ந்து 20 வயது இளம் பெண்ணை கடந்த மே மாதத்தில் 10 நாட்கள் தொடர்ந்து அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது- பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார் இப்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீதிபதியிடம் கதறிய பெண்
இளம் பெண் போலீஸ்கார்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக கடந்த அக்டோபர் 10ம் தேதி தான் முதல்முதலாக வெளிஉலகிற்கு தெரிந்தது. அக்டோபர் 10 ம் தேதி சிறைச்சாலை ஆய்வுக்காக கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் குழு சென்றிருந்தபோதுதான் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்திகளின்படி, அந்த பெண் கூடுதல் மாவட்ட நீதிபதி முன் போலீசார் மீது குற்றச்சாட்டுகளை கூறி கதறி அழுதுள்ளார்.
எப்போது நடந்த சம்பவம்
நீதிபதியிடம் அவர் சொன்ன தகவலின்படி, அந்த இளம் பெண் மே 9 மற்றும் மே 21 க்கு இடையில் காவல் நிலையத்தில் ஐந்து போலீசாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாராம். அதை அங்கிருந்து ஒரு பெண் கான்ஸ்டபிள் எதிர்த்துள்ளார். அதையும் மீறி தனக்கு கொடுமை நடந்திருக்கிறதாக கூறினார்.
வார்டனிடம் கூறியிருக்கிறார்
சிறைக்குச் சென்ற நீதிக் குழுவில் இடம் பெற்ற வழக்கறிஞர் மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து சிறை வார்டனிடம் அந்தப் பெண் கூறியிருக்கிறார். இதேபோல் பாலியல் பலாத்காரம் குறித்து அந்தப் பெண் தன்னிடம் கூறியதாக வார்டனும் ஒப்புக் கொண்டார் என்றார்.
நீதி விசாரணைக்கு உத்தரவு
இதனிடையே போலீசாரோ நாங்கள் அந்த பெண்ணை கொலை வழக்கில் , மே 21 அன்று தான் கைது செய்தோம் என்று தெரிவித்தனர். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். எனினும் மத்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநில அரசு நீதிமன்ற நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.