தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற "மங்கி"... புகார் கொடுத்த பெண்... குழப்பத்தில் போலீஸ்
லக்னோ: தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்ற குரங்கு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவர் போலீசில் புகார் செய்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் கவுசல்புரியைச் சேர்ந்தவர் ஊர்மிளா சக்சேனா. இவர் நேற்று மாலை அருகில் இருந்த கோவில் ஒன்றிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று ஊர்மிளாவின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியைப் பறிக்க முற்பட்டது.
குரங்கிடம் இருந்து தனது தங்கச்சங்கிலியைக் காப்பாற்ற ஊர்மிளா கடுமையாக போராடினார். இறுதியில் குரங்கின் கையில் இருந்து பாதிச் சங்கிலியைத் தான் ஊர்மிளாவால் பிடுங்க முடிந்தது. மீதிச் சங்கிலியுடன் மரத்தில் ஏறி தப்பிச் சென்றது குரங்கு.
கோவிலில் இருந்து நேராக நசிராபாத் காவல் நிலையம் சென்ற ஊர்மிளா, சங்கிலியைப் பறித்துச் சென்ற குரங்கு மீது புகார் அளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட குரங்கு மீது வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து, பறிபோன தனது தங்கச் சங்கிலியை மீட்டுத்தர வேண்டும் என்றும் அவர் போலீஸாரிடம் கேட்டுக் கொண்டார்.
செயின் பறிப்பு தொடர்பாக பிரபல ரவுடிகள் மீது அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களைக் கண்டுபிடித்து நகைகளைப் பறிமுதல் செய்வதே பெரும்பாடாக உள்ள நிலையில், குரங்கின் மீது எந்த சட்டத்தின்கீழ் வழக்கு தொடர்வது? என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் உத்திரப்பிரதேச போலீசார்.
மேலும், மரம் மரமாக ஏறி அந்தக் குரங்கை எப்படி அடையாளம் கண்டு, மீதி சங்கிலியை எப்படி மீட்பது என அவர்கள் தலையைச் சொரிந்து வருகின்றனர்.