டெல்லியில் முன்னாள் காதலிக்கு பாடம் புகட்ட முகத்தில் ஆசிட் வீசிய வாலிபர்
டெல்லி: டெல்லியில் 30 வயது பெண் மீது பைக்கில் சென்ற 2 பேர் ஆசிட் வீசியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
வடகிழக்கு டெல்லியில் உள்ள கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் தனது வீட்டு உரிமையாளர் மன்ஜீத் என்பவரை காதலித்துள்ளார். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். இதையடுத்து மன்ஜீத் அந்த பெண்ணுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார்.
அந்த பெண் கேசவ்புரம் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். நேற்று இரவு 8.30 மணிக்கு அவர் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மன்ஜீத் மற்றும் இன்னொருவர் பைக்கில் வந்து அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் முகத்தின் வலது பக்கம் படுகாயம் அடைந்துள்ளதாகவும், மேலும் அந்த பக்கம் உள்ள கண் பாதி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மன்ஜீத்தை கைது செய்துள்ளனர், மற்றொருவரை தேடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் முதலில் முரண்டுபிடித்த மன்ஜீத் பின்னர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.