அடுத்த ஷாக்.. மகளை சீரழித்த கும்பல்.. புகாரளித்த தாய்.. பூட்ஸ் காலால் மிதித்து.. கொடூர கொலை.. வீடியோ
சிறுமியின் தாயாரை 6 பேர் கொண்ட கும்பல் அடித்து கொன்றுள்ளது
கான்பூர்: தங்கள் மீதான பாலியல் புகாரை திரும்ப பெற வேண்டும் என்று வீடு புகுந்து மிரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது தாயையும் கண்மூடித்தனமாக அடித்து தாக்கி உள்ளது.. பூட்ஸ் காலாலேயே எட்டி உதைத்து, வெட்டி கொலை செய்ததில் அந்த பெண்ணின் தாயார் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
சொல்ல முடியாத அளவுக்கு பாலியல் பலாத்காரங்கள் வடமாநிலங்களில் நடந்து வருகின்றன.. அதிலும் உத்திரபிரதேசத்தை நினைத்தாலே ஈரக்குலையே நடுங்குகிறது.
உன்னவ் பலாத்கார விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அடித்துக் கொல்லப்பட்டதையே இன்னும் யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.. அதற்குள் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.
பலாத்காரம்
கான்பூரில் கடந்த 2018-ல் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று 17 வயது இளம்பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது.. இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் தரப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட சாந்த் பாபு, மிந்து, ஜமீல், மஹ்பூப், ஆபித் மற்றும் ஃபிரோஸ் ஆகிய 6 பேரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். ஆனால் சில தினங்களுக்கு முன்பு இவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.
மறுப்பு
வெளியே வந்தும் இவர்கள் அடங்கவில்லை.. போலீசில் மாட்டிவிட்டதால் அந்த குடும்பத்தை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். தங்கள் மீதுள்ள கிரிமினல் புகாரை வாபஸ் பெறுமாறும் மிரட்டி வந்துள்ளனர்.. இதற்கு பெண்ணின் தாய் மறுத்து வந்ததாக தெரிகிறது.
பூட்ஸ் காலால் தாக்குதல்
இந்நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், 6 பேர் கொண்ட கும்பலை திடீரென அழைத்து கொண்டு ஜனவரி 9 ம் தேதி அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தனர்.. அங்கிருந்த பெண்ணையும், மற்றும் அவரது தாயையும் வீட்டிற்கு வெளியே தரதரவென இழுத்து வந்தனர்.. நடுத்தெருவில் வைத்து, மொத்தமாக சேர்ந்து பெண்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலை வெறி செயலில் ஈடுபட்டனர்.. இதில் குற்றவாளிகளில் ஒருவன் பெண்ணின் தாயின் முகத்தில் பூட்ஸ் காலாலேயே மிதித்துள்ளான்.
உயிரிழந்தார்
பின்னர் அரிவாளை கொண்டே இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.. இதில் 2 பேருமே உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.. தொடர்ந்து ஒரு வாரமாக தாய் - மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்துவிட்டார். பெண்களை இழுத்து போட்டு, எட்டி உதைத்து தாக்கும் இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
|
5 பேர் கைது
வீடியோவை ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர்களை தேடி வருவதாக போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். இதனிடையே அதில் 5 பேரை கைது செய்துள்ளதாகவும், ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட 3 பேரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண்ணை சீரழித்ததும் இல்லாமல், புகாரை வாபஸ் பெற மறுத்ததால் சரமாரியாக பெண்ணின் தாயாரை தாக்கும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.