மரபை மீறி சனிபகவானை நெருங்கிய பெண்: பந்த் நடத்தி கோவிலை புனிதப்படுத்திய கிராமத்தினர்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சனி பகவான் கோயிலில் மரபை மீறி பெண் ஒருவர் வழிபாடு நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முழு அடைப்பு போராட்டம் நடத்தி தங்களின் கண்டனத்தை தெரிவித்த கிராம மக்கள் கோவிலை புனிதப்படுத்தும் பூஜையை செய்துள்ளனர். சனி பகவான் என்றாலே தமிழ்நாட்டில்தான் அச்சம் அதிகமாக இருக்கிறது என்றால் வடநாட்டில் கூட சனீஸ்வர வழிபாடு சற்று கூடுதலாகவே இருக்கிறது.
கதவுகள் இல்லாத வீடுகள்
மகாராஷ்ட்ரா மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தின் சனி ஷிங்கனபூர் என்ற கிராமத்தில், சனி பகவானுக்கு கோவில் உள்ளது. இங்குள்ள 4 ஆயிரம் வீடுகளிலும் வீட்டுக்கு கதவு கிடையாது. இங்கு பூட்டு, கதவுகள் இல்லாமல் வீடு கட்டுவது மரபாக இருந்து வருகிறது.
சனி பகவான் கோவில்
அதேபோல சனி பகவான் கோவிலுக்கும் கதவு கிடையாது. 5 அடி உயரத்தில் கருங்கல்லில் உருவாக்கப்பட்ட சனி பகவான் சிலை இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
சனி பகவான் சிலை மேற் கூரையில்லாத நிலைமேடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தடை
பெண்கள் இக்கோயிலுக்குள் நுழைந்து வழிபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சனி பகவான் சிலை அருகே நெருங்கி சென்று வணங்கியுள்ளார். பின்னர் கூட்டத்தினரோடு கலந்து விட்டார்.
மரபை மீறிய பெண்
சனி பகவான் சிலை அருகே பெண்கள் வரக் கூடாது என்பது இந்த கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் சாஸ்திரம். ஆனால் அந்த பெண் சனிபகவான் சிலை அருகே சென்று வழிபட்டது கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் தெரியவந்தது.
முழு அடைப்பு போராட்டம்
சனி பகவான் சிலை அருகே சென்று பெண் வணங்கியதால், துரதிருஷ்டம் ஏற்படும் என்றும், ஊருக்கு கெடுதல் வரக்கூடும் என்று தெரிவித்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த தினத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 7 பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெருகும் ஆதரவு
அதேநேரத்தில் சனிபகவான் கோவிலில் வழிபாடு செய்த பெண்ணின் செயலுக்கு மகளிர் மற்றும் சமூக அமைப்புகள், சில அரசியல் தலைவர்களிடமிருந்து ஆதரவுகள் குவிகின்றன. அந்த பெண்ணுக்கு நிச்சயம் ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று சோலாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரநிதி ஷிண்டே கூறியுள்ளார்.
புனித சடங்கு
இது ஒருபுறம் இருக்க சனிபகவான் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி, புனிதப்படுத்தும் சடங்குகளும் செய்யப்பட்டது. சனிபகவான் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து கோயிலை அக்கிராம மக்கள் புனிதம் செய்துள்ளனர் இதன்மூலம் அந்த பெண் செய்த தீமைகள் விலகிவிடும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
சனிபகவான் பார்வைக்கு எல்லா ஊர்காரங்களும் பயப்படத்தான் செய்றாங்க.