என் கணவரே எம்எல்ஏவுக்கு என்னை விருந்தாக்கினார்.. சித்ரவதை தாங்கமுடியாமல் போலீஸில் கதறிய பெண்!
தன்னை பலாத்காரம் செய்ய தனது கணவரே எம்எல்ஏவுக்கு உதவியதாக புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திஸ்பூர்: எம்எல்ஏ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் கூறிய பெண் ஒருவர், இதற்கு தனது கணவரே எம்எல்ஏவுக்கு உதவியதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் பாதுகாப்புக்காக எத்தனை சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் உள்ளது.
ஒவ்வொரு சம்பவத்தின் போதும் கண்டனம் தெரிவிப்பதும் சூட்டோடு சூடாக போராட்டம் நடத்துவதுமே மட்டுமே வாடிக்கையாக உள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடராத வகையில் நிரந்தர தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.
கணவர் உதவியுடன் பலாத்காரம்
கட்டிய கணவர் உடன் பிறந்த சகோதரன், பெற்ற தந்தை என பல உறவுகளாலும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது தற்போது அதிகரித்துவிட்டது. இந்நிலையில் அசாமில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் உதவியுடன் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்எல்ஏ மீது புகார்
அசாம் மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நிஜாம் உத்தின் சவுத்திரி. இவர் மீதுதான் அசாம் மாநிலம் ஹைலகண்டி போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் ஒன்றை கூறியுள்ளார்.
கடந்த மாதம் 2 முறை
அதில் தனது கணவர் துணையுடன் எம்.எல்.ஏ நிஜாம் உத்தின் சவுத்திரி தன்னை கடந்த மே மாதம் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். மே 19 ஆம் தேதியும் மே 23ஆம் தேதியும் எம்எல்ஏ தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக கூறியுள்ளார்.
தற்கொலை முயற்சி
மேலும் எம்எல்ஏ தன்னை கவுகாத்திக்கு கடத்திச் செல்ல எம்.எல்.ஏ. முயன்றதாகவும், தான் தற்கொலைக்கு முயன்றதால் அந்த முயற்சியை எம்எல்ஏ நிஜாம் உத்தின் சவுத்திரி கைவிட்டதாகவும் கூறியுள்ளார்.
எம்எல்ஏ மறுப்பு
இதுதொடர்பாக ஹைலகண்டி போலீசார் எம்.எல்.ஏ நிஜாம் உத்தின் சவுத்திரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை எம்.எல்.ஏ. நிஜாம்உத்தின் சவுத்திரி மறுத்துள்ளார்.
தனக்கு எதிரான சதி
இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் தனக்கு எதிரான சதி என்றும் கூறியுள்ளார். மேலும் குடும்ப பிரச்சனை காரணமாக அந்த பெண்தான் அவரது கணவருடன் தன்னை சந்தித்ததாகவும் அவருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் நிஜாம் உத்தின் சவுத்திரி தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு எம்எல்ஏ
ஏற்கனவே உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது திருமணமான பெண் ஒருவர் மேலும் ஒரு எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.