இங்க இருந்த டாய்லெட்டை காணோம்.. வடிவேல் பாணியில் போலீசிடம் புகார் கொடுத்த சத்தீஸ்கர் பெண்
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் வீட்டு கழிப்பறையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் வீட்டு கழிப்பறையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
அமர்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. பேலா பாய் பட்டேல், சந்தா என்ற இரண்டு பெண்கள் போலீசில் இந்த புகாரை கொடுத்து இருக்கிறார்கள்.
இந்த புகாரை கொடுக்க சுரேந்திர பட்டேல் என்ற சமூக சேவகர் அந்த பெண்களுக்கு உதவி இருக்கிறார். வடிவேல் கிணற்றை காணும் என்று புகார் கொடுத்தது போலவே இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
கழிப்பறை பணம்
பேலா பாய் பட்டேல், சந்தா குடும்பத்திற்கு 2016ல் கழிப்பறை கட்டித்தருவதாக அரசு அறிவித்து இருக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் அவர்கள் குடும்பம் இலவச கழிப்பறைக்கு தேர்வாகி இருக்கிறது. இதற்கான பணம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பணம் சுருட்டப்பட்டது
ஆனால் இதற்காக வழங்கப்பட்ட பணத்தை பஞ்சாயத்து நிர்வாகிகள் சுருட்டி இருக்கிறார்கள். அந்த பெண்ணின் குடும்பத்திடம் கழிப்பறை கட்ட பணம் கொடுக்கவில்லை என்று பொய் சொல்லி இருக்கிறார்கள். அந்த கிராமத்தில் பல குடும்பங்கள் இப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
சமூக சேவகர்
சுரேந்திர பட்டேல் என்ற சமூக சேவகர் இந்த மோசடியை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கண்டுபிடித்து இருக்கிறார். ஏற்கனவே கழிப்பறை கட்டப்பட்டுவிட்டதாக கோப்புகள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. கழிப்பறை கட்டாமல் கட்டிவிட்டதாக பஞ்சாயத்து அதிகாரிகள் எழுதி கொடுத்துள்ளார்கள்.
பெண் புகார்
தற்போது இந்த தகவல் அறியும் உரிமை சட்ட விவரத்தை வைத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அரசு கட்டிக் கொடுத்த கழிப்பறையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து இருக்கிறார்கள். போலீசில் இதில் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கிறது.