மும்பை அருகே நடு ரோட்டில் பெண் போலீஸ்காரரை அடித்து மூக்கை உடைத்த சிவசேனை பிரமுகர்
மும்பை: நடு ரோட்டில் பெண் போலீசை சிவசேனா பிரமுகர் அடித்து உதைத்த சம்பவம் வீடியோ காமிராவில் பதிவாகி வைரலாக பரவியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரை சேர்ந்தவர்ர் சசிகாந்த். சிவசேனா பிரமுகர். இவர் நேற்றுமுன்தினம் தனது ஸ்கார்பியோ காரில், கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையில் போனில் பேசியபடியே சென்றுள்ளார். இதனைக் கவனித்த பெண் போக்குவரத்துக் காவலர், காரை நிறுத்தும்படி சைகை காட்டியுள்ளார்.
காரை வழி மறித்ததால் சசிகாந்த்துக்கு கோபம் வந்துவிட்டதாம். எனவே, காரைவிட்டு இறங்கி அந்த பெண் காவலரின் கன்னங்களில் மாறி மாறி அறைவிட்டார்.
இந்த எதிர்பாராத தாக்குதலால், பெண் போலீஸின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்துள்ளது. இந்த தாக்குதலைக் கண்டித்து குறுக்கிட்ட வக்கீல் ஒருவருக்கும் அடி உதை விழுந்துள்ளது.
இந்தக் காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவிலும் பதிவாகியதால் தற்போது அந்த வீடியோ வைரலாக பரவியுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சசிகாந்தை கைது செய்து தானே மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.