ஆற்று வெள்ளத்தில் நீந்திக் கடந்து ஆண் குழந்தை பிரசவித்த பெண்!
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றை 2 மணி நேரம் நீந்தி கடந்த துணிச்சல் மிக்க ஏழை பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கர்நாடகாவில் யாதகிரி மாவட்டத்தில் சுராப்பூர் என்னுமிடத்தின் அருகே நீலகண்ட நாராயணகட்டி என்னும் கிராமம் உள்ளது. மாராத்தி மொழி பேசுவோர் வாழும் இக்கிராமத்தை சேர்ந்தவர் கட்டி பாலப்பா. இவரது இரண்டாவது 22 வயதான மனைவி எல்லவ்வா.
மிகவும் பின் தங்கிய பகுதியான நீலகண்ட நாராயணகட்டியில் மருத்துவ வசதியோ, போக்குவரத்து வசதியோ கிடையாது. அவசர மருத்துவ தேவைக்கு அருகிலுள்ள கெக்ககேரா-விற்கு செல்ல வேண்டும்.
இந்த இரு கிராமங்களுக்கும் இடையில் கிருஷ்ணா ஆறு ஓடுவதால் மழைக் காலத்தில் ஆற்றை கடப்பதென்பது மிகவும் கடினமாகும்.
கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையின் காரணமாக கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைப் புரண்டு ஓடியது. இதனால் நீலகண்ட நாராயணகட்டி கிராமத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்திருந்தது.
போக்குவரத்து முற்றிலும் முடங்கி கிராம மக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். நாளுக்கு நாள் வெள்ளம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இதனால் 9 மாத கர்ப்பிணியாக இருந்த எல்லவ்வாவிற்கு அச்சம் ஏற்பட்டது. பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு போகவேண்டும் என்று நினைத்த அவர்,அவர் ஆற்றை கடக்க முடிவு செய்தார். ஆனால் அவருக்கோ நீச்சல் தெரியாது. ஆற்றில் அளவுக்கு அதிகமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் படகு ஓட்டுநர்களும் ஆற்றில் இறங்க மறுத்தனர்.
நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்கவேண்டாம் என குடும்பத்தாரும் கிராமத்தாரும் எதிர்த்தனர்.
துணிச்சல் பெண்
தனது முடிவில் பிடிவாதமாக இருந்த எல்லவ்வா, கடந்த ஜூலை 31-ம் தேதி தனது தம்பி லட்சுமண், தந்தை ஹனுமப்பா, உறவினர்கள் சிலரின் உதவியுடன் துணிந்து ஆற்றில் இறங்கினார். 16 அடி ஆழமுள்ள கிருஷ்ணா ஆற்றில் கயிறு மற்றும் சுரைக்குடுவையை கட்டிக்கொட்டு துணிச்சலுடன் குதித்தார்.
2 மணி நேரம் நீச்சல்
700 மீட்டர் நீளமுள்ள ஆற்றை சுமார் 2 மணிநேரம் மூச்சிறைக்க நீந்தி கடந்துள்ளார். குளிரிலும்,உடல் வலியிலும் துடித்த அவரைக் கண்டு மறுகரையில் நின்றவர்கள் கடுமையாக அதிர்ந்து போயினர்.
புகைப்படம் எடுத்த நிருபர்
எல்லவ்வா 9 மாத கர்ப்பிணியாக ஆற்றில் நீந்தி வந்தபோது சுற்றியிருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். அதனை மற்றொருகரையில் இருந்து கவனித்த சிலர் அங்கிருந்த கன்னட நாளிதழின் நிருபருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் சம்பவ இடத்துக்கு வந்து துணிச்சல்மிக்க எல்லவ்வாவை படமெடுத்து பத்திரிகையில் வெளியிட்டார்.
இரண்டாவது மனைவி
இந்த சாகச முயற்சி குறித்து கூறிய எல்லாவ்வா, தன் கணவர் பாலப்பாவுக்கு அவர் இரண்டாவது மனைவி என்றார். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் தான் என்னை திருமணம் செய்தார். எனக்கும் திருமணாகி 4 ஆண்டுகள் ஆயிற்று. எனவே தற்போது நான் கர்ப்பமானதும் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க நினைத்ததாக தெரிவித்தார்.
நீச்சல் தெரியாமலே
தமக்கு அவ்வளவாக நீச்சல் தெரியாது என்ற எல்லாவ்வா துணி துவைக்க மட்டுமே ஆற்றுக்கு போயிருப்பதாக கூறினார். ஆனாலும் கணவர் மற்றும் பிறக்க போகும் குழந்தைக்காக ஆற்றைக் கடந்து மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்ததாக கூறினார். ஆற்றில் குதிப்பதற்கு முன்னால் கடவுளையும் கணவரையும் மனதில் நினைத்து கொண்டதாக தெரிவித்தார்.
குழந்தையால் வந்த துணிச்சல்
நீந்தும் போது மிக குளிராகவும் பயமாகவும் இருந்ததாக கூறிய அவர், தனது சகோதரனும், தந்தையும் நீந்துவதற்கு சொல்லி தந்தார்கள் என்றார். அவர்கள் சொற்படியே தாம் நீந்தி வந்ததாகவும் கூறினார். தமது மனதில் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்ததாக குறிப்பிட்டார்.
பிரசவ வலி
இந்த நிலையில் எல்லவ்வாவிற்கு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மிகவும் மெலிந்திருந்த அவருடைய உடலில் போதிய ரத்தம் இல்லாததால் மருத்துவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆண் குழந்தை பிரசவம்
இதனால் எல்லவ்வாவை அவரது குடும்பத்தினர் ரெய்ச்சூர் மாவட்டம் லிங்கசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அறுவை சிகிச்சையின் மூலம் 4 கிலோ எடையுள்ள ஆண்குழந்தை பிறந்தது.
அறுவை சிகிச்சை
பிரசவத்தின் போது எல்லவ்வா மிகவும் சோர்வடைந்து இருந்ததாகவும், அறுவை சிகிச்சையின் மூலமாகவே குழந்தையையும் தாயையும் உயிரோடு காப்பாற்ற முடியும் என்ற நிலையில் இருந்ததாலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவர் கூறினார்.
இலவச சிகிச்சை
இந்த பெண்ணின் துணிச்சலை கேட்டு பிரம்மித்ததாக கூறியுள்ள மருத்தவர், அவரது குடும்ப சூழ்நிலையை மற்றம் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு அவரிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என முடிவெடுத்திப்பதாக தெரிவித்தார்.