என்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா ?
குர்கான்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 56 வயது பெண் சுகாதாரப் பணியாளர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
குர்கானில் 56 வயது சுகாதாரப் பணியாளர்கள் ஜனவரி 16 அன்று கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இவர் நேற்று தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்ததற்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது தான் காரணம் என தகவல் பரவியது. இதனை மறுத்துள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அதற்கு விளக்கமும் அளித்துள்ளனர்.
அதில், ராஜ்வதி என்ற அப்பெண் பங்குரோலா ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி வந்தார். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவரது மரணத்திற்கு எந்த குறிப்பிட்ட பாதிப்பும் இருந்ததாக தெரியவில்லை. அவரது உள்ளுறுப்புகள் திசுவியல் மற்றும் வேதியில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என குர்கான் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் வீரேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட அறிக்கையில் அவரது மரணத்திற்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணம் இல்லை என தெரிய வந்துள்ளது. திடீர் மாரடைப்பு கூட மரணத்திற்கு காரணமாக இருக்கலாம். பிரேத பரிசோதனை அறிக்கையுடன் உள்ளுறுப்பு பரிசோதனை முடிவுகளை ஒப்பிட்டு பார்த்தால் தான் உண்மையான காரணம் தெரிய வரும் எனவும்
அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்பெண்ணின் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என அவரது கணவர் லால் சிங் சரோகா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நேற்று இரவு இருவரும் ஒன்றாக தான் சாப்பிட்டோம். வழக்கம் போல் சாதாரணமாக தான் இருவரும் தூங்க சென்றோம். காலை 6 மணி வரை அவள் கண் வழிக்காததால், அவளை எழுப்பினேன். அப்படியும் அவள் கண் விழிக்காதால் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றோம். டாக்டர்கள் அவளை பரிசோதித்து விட்டு, அவள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவளுக்கு ரத்த அழுத்தமோ மற்ற உடல்நல கோளாறுகளோ ஏதும் இல்லை. வழக்கம் போல் தனது பணியை செய்து வந்தாள். திடீரென என மரணம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தடுப்பூசி தான் காரணம் என சந்தேகிக்கிறோம் என்றார். 2023 ல் ராஜ்வந்தி பணி ஓய்வு பெற இருந்ததாகவும், தனது பணி காலத்தை ஒருநாள் கூட அவர் விடுப்பு ஏதும் எடுக்காமல், மக்களுக்காக சேவை செய்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்கனவே பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வரும் நிலையில், இச்சம்பவம் மக்களிடம் மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.