ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆபாசமாகப் பேசி கீழே தள்ளிவிட்டதாக பெண் புகார் - எம்.எல்.ஏ மறுப்பு
டெல்லி: அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மொஹானிய மீது பெண் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று தினேஷ் மொஹானிய மறுப்பு தெரிவித்துள்ளார்.
சங்கம் விகார் தொகுதியின் எம்.எல்.ஏ தினேஷ் மொஹானியா. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். எம்எல்ஏ தன்னை தகாதா வார்த்தைகளில் பேசியதாகவும், கீழே பிடித்து தள்ளியதாகவும், ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து போலீசார் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
FIR against AAP MLA Dinesh Mohaniya for misbehaving with Woman: New Delhi: A woman has lodged a police compla... https://t.co/tMoXoXtmgB
— Neeraj Sinha (@neerasinha45) June 23, 2016
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த பெண், குடிநீர் பிரச்சனை காரணமாக நான் தினமும் அவரது அலுவலகத்துக்கு செல்வேன். அவர் என்னையும், மற்றொரு பெண்ணையும் கீழே தள்ளி அதிகார துஷ்பிரயோகம் செய்தார். அதனால் தினேஷ் மொஹானியாவை கைது செய்ய வேண்டும் என்று அவர் மீது வழக்குப் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள், புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி எம்.எல்.ஏ தினேஷ் மொஹானியவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், தான் நிச்சயமாக தவறாக நடக்கவில்லை என்றும், இது அடிப்படை ஆதாரமற்ற புகார் என்றும் கூறினார். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தனக்கு தெரியும் என்று கூறியுள்ள அவர், நடந்த உண்மை என்னவென்று போலீசார் விசாரணை செய்து நிரூபிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏவின் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஊடகங்களால் தலைப்புச் செய்திகளாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.