திருப்பதி லட்டில் அடுப்பு கரித்துண்டு…பதறிய பக்தர்… தேவஸ்தானம் தெனாவெட்டு பதில்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் வழங்குவது வாடிக்கை. இந்த லட்டில் அடுப்புக் கரித்துண்டு இருந்ததைக் கண்டு பக்தர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் அடுப்புக்கரி இருந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணா மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த தேவாம்பிகையாமினி. இவர் திருப்பதி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலுக்கு வெளியே உள்ள லட்டு கவுண்டரில் லட்டு பெற்றுக் கொண்டார்.
பிரசாதத்தை பக்தி மயத்துடன் சாப்பிட எண்ணிய அவர், வாங்கிய லட்டை எடுத்து உடைத்து வாயில் போட்டுள்ளார். அப்போது வாயில் ஏதோ சிக்கியுள்ளது. இதனால் பதறி அடித்து வாயில் இருந்த பிரசாத லட்டை வெளியே துப்பினார். அப்போது லட்டில் கரித்துண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, தேவாம்பிகையாமினி தேவஸ்தான சுகாதார துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் கோயிலுக்குள் எரிவாயு அடுப்புதான் பயன்படுத்துகிறோம். அதனால் லட்டுவில் கரித்துண்டு வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். எனினும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.