மவனே மாட்னியா நீ... வங்கியில் பணமெடுக்க காத்திருந்த மாஜி காதலரை சரமாரியாக வெளுத்த பெண்!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரூபாய் நோட்டை மாற்ற வந்த போது தன்னைக் கைவிட்டு விட்டு ஓடிப் போன காதலரைப் பார்த்த பெண் அவரை சரமாரியாக அடித்து உதைத்தார்.
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒரு கூத்து அரங்கேறியுள்ளது. வங்கியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் பண விவாகரத்திற்காக அல்ல.. மாறாக பழைய காதல் பஞ்சாயத்து தொடர்பாக நடந்த அடிதடியாகும்.
நாசிக், டிம்பாக் சாலைில் உள்ள ஒரு வங்கியில் பழைய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்துப் பணம் எடுக்கக் காத்திருந்தார் 35 வயது கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டது). அப்போது அங்கு 23 வயது ராதா (பெயர் மாற்றப்பட்டது) பணத்தை மாற்றி விட்டு வெளியே வந்தார். அப்போது கார்த்திக்கைப் பார்த்த ராதாவுக்கு கடும் கோபம் வந்து விட்டது.
கார்த்திக்கை நெருங்கிய ராதா, அவரை சரமாரியாக அடித்தார். அத்தோடு நில்லாமல் தனது தந்தை, சகோதரருக்கும் போன் போட்டார். அவர்கள் விரைந்து வந்து அவர்களும் கார்த்திக்கை சரமாரியாக அடித்தனர். போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து சண்டையை விலக்கி விட்டு, ஏங்க இத்தனை பேரும் சேர்ந்து ஒருத்தரைப் போட்டு அடிக்கிறீங்க என்று கேட்டுள்ளனர்.
அப்போது ராதா கூறுகையில், நானும் இவரும் காதலித்து வந்தோம். திடீரென இவர் என்னைக் கைவிட்டு விட்டுப் போய் விட்டார். 4 வருடமாக சத்தமே இல்லை. இவரைத் தேடி வந்தேன். இன்றுதான் சிக்கினார் என்று கூறினார். பின்னர் அவர் போலீஸில் புகாரும் கொடுத்தார். அதன் பேரில் அடி வாங்கி கார்த்திக் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் அடி கொடுத்த ராதா, அவரது அப்பா, சகோதரர் மீது எந்தப் புகாரும் பதியவில்லை போலீஸார்!
ரூபாய் நோட்டு ஒழிப்பால் இன்னும் என்னென்னெ அக்கப் போரெல்லாம் நடக்கப் போகுதோ நாட்டில்!