செயினை பறிக்க முற்பட்ட திருடர்களை கூல்டிரிங்ஸ் பாட்டிலால் அடித்து விரட்டிய வீரப்பெண்
காசியாபாத்: செயின் வழிப்பறித் திருடர்களை தனது கையிலிருந்த கூல்டிரிங்ஸ் பாட்டிலால் அடித்து விரட்டியிருக்கிறார் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள தனது விரல் நகங்களையும் ஆயுதமாக பெண் பயன்படுத்தலாம் என மகாத்மா கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வரும் சூழலில் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தங்கள் கைவசம் உள்ள பொருட்களையே கேடயமாகப் பயன் படுத்தலாம் என்பதற்கு ஒரு உதாரணம் தான் காசியாபாத் நகரில் நடந்த இந்தச் சம்பவம்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் பாஞ்சீல் பகுதியை சேர்ந்த ஊர்மிளா சிங், நேற்று ஷாகிபாபாத் பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அவர் கழுத்தில் இருந்த செயினைப் பறிக்க இரு வாலிபர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களை தனது கையிலிருந்த கூல்டிரிங்ஸ் பாட்டிலால் அடித்து விரட்டியடித்துள்ளார் ஊர்மிளா.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘ஊர்மிளாசிங் மார்க்கெட் சென்றுவிட்டு 2 மணி அளவில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் முகவரி விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் ஊர்மிளாசிங்கை நோட்டமிட்டு தங்க செயினை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.
சுதாரித்து கொண்ட ஊர்மிளா உடனடியாக தனது பையில் இருந்த கூல்டிரிங்ஸை கொண்டு அவர்களை அடித்துவிட்டு திருடர்கள், திருடர்கள் என்று சத்தம்போட்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது திருடர்கள் நிலையை அறிந்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இது தொடர்பாக ஊர்மிளா அளித்த புகாரின் படி நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளனர்.