கணவர் மகள்கள் இறந்த சில மணிநேரத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்
பஞ்சாபில் கணவர் மற்றும் இரண்டு மகள்களை பறிகொடுத்த சில நிமிடங்களிலேயே கர்ப்பிணி பெண் ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதின்டா: பஞ்சாபில் கணவர் மற்றும் இரண்டு மகள்களை பறிகொடுத்த சில நிமிடங்களிலேயே கர்ப்பிணி பெண் ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் முக்ஸ்டர் மாவட்டத்தில் உள்ள மாலவுட் நகரில் வசிப்பவர் தேஜிந்தர்பால் கவுர். இவருக்கு அம்ரித்பால் சிங் என்ற கணவரும் மன்சரித் என்ற 6 வயது மகளும் அக்மஞ்சாட் என்ற 4 வயது மகளும் இருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த தேஜிந்தர்நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
வெளியே வந்த தேஜிந்தர்
இதனால் அம்ரித்பால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் அறையில் உறங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் தண்ணீர் தாகம் எடுத்த தேஜிந்தர் தண்ணீர் குடிப்பதற்காக அறையை விட்டு வெளியே வந்தார்.
சிக்கிய கணவர், மகள்கள்
அப்போது திடீரென அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் தேஜிந்தரின் கணவர் அம்ரித், மற்றும் இரண்டு மகள்கள் சிக்கிக்கொண்டனர்.
உதவிய அக்கம்பக்கத்தினர்
இதனைக் கண்டு அலறி துடித்தார் மனைவி தேஜிந்தர். அவரது கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கதறிய மனைவி
ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கணவரையும் குழந்தைகளையும் பறிகொடுத்த வேதனையில் கதறியழுதார் தேஜிந்தர்.
இரட்டை குழந்தைகள்
நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு அடுத்த சில மணி நேரத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
எம்எல்ஏ நிதியுதவி
கணவர் மகள்கள் இறந்த சில மணி நேரத்தில் கர்ப்பிணி பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அத்தொகுதி எம்எல்ஏவான அஜய்ப் சிங் பட்டி தேஜிந்தர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
எம்எல்ஏ வேதனை
அவரது குடும்பத்திற்கு தேவையான நிதியுதவிகள் கிடைக்க முதல்வரிடம் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார். மேலும் கணவர் மற்றும் குழந்தைகளை இழந்த சில மணிநேரத்தில் தேஜிந்தருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கும் விதி ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.