பெண் குழந்தை பெற்றெடுத்த "குஷ்பு"... ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த மாமியார் பிரேமா!
உத்தரப்பிரதேசத்தில் பெண் குழந்தையை பெற்றுத் தந்த பெண்ணுக்கு அவரது மாமியார் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
லக்னௌ: பெண் சிசு கொலைகளை தடுக்க பல சட்டங்கள் இருந்தாலும் இந்தியாவில் அவ்வப்போது பெண் சிசு கொலைகள் நிகழ்ந்துதான் வருகிறது. 2011 கணக்கெடுப்பின்படி கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்கள் ஒரு கோடியே 20 லட்சம் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளை கொண்டாடி அவருக்கு விலை உயர்ந்த பரிசை கொடுத்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார் ஒரு மாமியார்.
அங்குள்ள ஹமிர்பூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பிரேமா தேவி. இவரது மருமகள் குஷ்புவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை பிறந்தது. தனக்கு பேத்தி பிறந்த சந்தோஷத்தில் மருமகள் குஷ்புவுக்கு ஹோண்டா சிட்டி காரை மாமியார் பிரேமா, பரிசாக வழங்கியுள்ளார்.
மாமியார் மருமகள் என்றாலே சண்டை தான் போட வேண்டுமா? மருமகளை மகளாக பாவிக்கும் மாமியார்களும் இருக்கத்தான் செய்கின்றனர். பெண் குழந்தை பெற்றெடுத்தால் மருமகளை கொடுமைபடுத்தி பாராமுகம் காட்டும் மாமியார்களுக்கு மத்தியில் பேத்தியை பெற்றுக்கொடுத்த மருமகளுக்கு ஹோண்டா சிட்டி காரை பரிசளித்துள்ளார் ஒரு மாமியார்.
அந்த அதிசய, அபூர்வ மாமியார், உத்தரப்பிரதேச மாநிலம், ஹமீர்பூரைச் சேர்ந்தவர். அவரது பெயர் பிரேமா தேவி. பெயருக்கு ஏற்றார் போல இவர் அன்பானவர். நேசத்திற்கு உரியவர். சுகாதாரத்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பிரேமா தேவி. இவரது மகன் அம்மாவட்ட அரசுத்துறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகனுக்கு குஷ்பு என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார்.
இவர்கள் இருவரும் தாய் மகள் போலவே பழகி வந்துள்ளனர். இந்நிலையில் குஷ்புவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை பிறந்தது. வட மாநிலங்களில் ஆண் கடவுளை விட, பெண் கடவுளான துர்கா தேவியைதான் அதிகமாக வணங்குவார்கள். இந்நிலையில் தன் வீட்டுக்கு மகாலட்சுமி துர்கா தேவியே வந்ததாக நினைத்து பிரேமா சந்தோஷத்தில் திளைத்துள்ளார்.
தனக்கு பேத்தி பிறந்ததை சந்தோசமாக கொண்டாடினார் பிரேமா. உறவினர்கள், நண்பர்களை அழைத்து விருந்துக்கும் ஏற்பாடு செய்தார். இந்த விருந்தின்போது அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில், தனக்கு பேத்தியை பெற்றெடுத்து கொடுத்த மருமகளுக்கும், பேத்திக்கும் சேர்த்து ஹோண்டா சிட்டி காரை பரிசாக வழங்கி மகிழ்ச்சியடைந்தார். இந்த நிகழ்வு விருந்துக்கு வந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மருமகளை மகளாக பாவிக்க வேண்டும் என்றும், பெண் குழந்தை பிறந்தால் கருவை கலைக்காமல், காக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவும் காரை பரிசாக வழங்கினேன் என்று கூறியுள்ளார் பிரேமாதேவி.
பிரேமாவின் இந்த செயல் மாமியாரால் கொடுமை செய்யப்படுதல், பெண் குழந்தை வேண்டாம் என கூறுபவர்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும். மேலும் இந்த செயலால் மாமியார் பிரேமா தேவி அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.
ஆண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியடையும் பெண்களுக்கு மத்தியில் பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளைக் கொண்டாடும் பிரேமா நிச்சயம் ஒரு உதாரண மாமியார்தான்.