ஆக்ராவில் ஒரே கல்லீரலுடன் உடல் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவருக்கு உடல் ஒட்டியபடி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் பிரதீப். கூலித் தொழிலாளி. அவரின் மனைவி மோகினி(20). நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த புதன்கிழமை பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மோகினிக்கு டாக்டர்கள் சசி குப்தாவும், சந்தீப் குப்தாவும் பிரசவம் பார்த்தனர். அவருக்கு உடல் ஒட்டியபடி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
குழந்தைகளுக்கு ஒரே கல்லீரல் தான் உள்ளது. லட்சத்தில் ஒரு குழந்தை தான் இப்படி பிறக்கும் என்றாலும் அறுவை சிகிச்சை மூலம் அவர்களை பிரிக்கலாம் என்று மருத்துவர் சந்தீப் குப்தா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் தந்தை பிரதீப் கூறுகையில்,
இரட்டை குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. ஆனாலும் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களை பார்த்துக் கொள்வேன். அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்றார்.