டெல்லி விமான நிலையத்தில் 33 துப்பாக்கி தோட்டாக்களுடன் சிக்கிய பெண்
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் 33 துப்பாக்கி தோட்டாக்களுடன் நாகாலாந்து செல்லவிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெண் ஒருவர் தனது கணவருடன் நாகாலாந்தில் உள்ள திமாபூருக்கு செல்ல டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 6ம் தேதி வந்தார். அனைத்து பயணிகளின் உடைமைகள் பரிசோதனை செய்யப்படுவது போன்றே அவரது உடைமைகளும் பரிசோதிக்கப்பட்டன.
அப்போது அவர் வைத்திருந்த பை ஒன்றில் .22 காலிபர் துப்பாக்கியின் 33 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தோட்டாக்களுக்கான முறையான ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படையினர் அவரை டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்தனர். விமான பயணத்தின்போது தோட்டாக்களை எடுத்துச் செல்வது விமான போக்குவரத்து சட்டத்திற்கு எதிரானது.
டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறப்படும் நிலையில் பெண் ஒருவர் தோட்டாக்களுடன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.