இரண்டு மகன்களுடன் தீக்குளித்த உத்தரபிரதேச இளம்பெண்- மூவரும் தீயில் கருகி உயிரிழப்பு
லக்னோ: உத்தரபிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதோஹி பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் பீப்பார்.இக்கிராமத்தைச் சேர்ந்தவரான சரிதா திவாரி என்ற அந்த இளம்பெண், தனது இரு மகன்களான கணேஷ் மற்றும் கார்த்திகே ஆகியோருடன் இணைந்து உடலில் கெரசின் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இச்சம்பவத்தால் அதிர்ந்து போன மக்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், அதற்குள் நிலைமை எல்லைமீறிப் போய்விட்டது. உடல் முழுவதும் தீ பரவியதால் மூவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்நிலையில் வரதட்சணைக்காக சரிதாவின் கணவர் வீட்டாரே அவர்களை எரித்துக் கொன்று விட்டனர் என்று அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். ஒரே வீட்டைச் சேர்ந்த மூன்று பேர் தீயின் கொடிய நாவிற்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.